திமுகவை விமர்சித்தீர்களே CM விஜய்.. உங்க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா? பிரபலம் கேள்வி
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த 10ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தில் முன் வைத்த மிகவும் முக்கியமான ஒன்று, பெண்கள் பாதுகாப்பு. அதாவது திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, அதற்கு காரணம் அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் காரணம் என்று எல்லாம் செல்லும் இடங்கள் எல்லாம் பிரசாரம் செய்தார்.
இப்படி இருக்கையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றதுமே, அவர் போட்ட முதல் மூன்று கையெழுத்துகளில் ஒன்று, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய சிங்கப் பெண் பாதுகாப்பு படை என்ற ஒரு தனிப்பிரிவை உருவாக்குவதற்கு தான். முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில், தனி படை உருவாக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இப்படி அதிரடியான முடிவை கையில் எடுத்துள்ளார் என்று பலரும் அவரை பாராட்டினர். குறிப்பாக விஜய் ரசிகர்களும் தவெகவினரும் பாராட்டித் தள்ளினர். இணையத்தில் பாராட்டு விழாவே சிறப்பாக நடைபெற்றது. இப்படி இருக்கையில், தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே, பெண்கள் மீதான வன்கொடுமை என்பது நடைபெற்றுக் கொண்டு இருப்பதை பரவலாக பார்க்க முடிகிறது.
பெண்கள் பாதுகாப்பு: சில தினங்களுக்கு முன்னர், திருச்சியில் இளைஞர் ஒருவர் அவரது காதலியை பொது இடத்தில் கல்லை வைத்து மிகவும் மோசமாக தாக்கி கொ*லை முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியின் புகைப்படங்களை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி தற்கொ*லை செய்து கொண்டுள்ளார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றவாளியை கைது செய்து, தண்டிக்க வேண்டும் என்று சாலையில் கதறி அழுது போராட்டம் செய்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

விளாசிய ப்ளூ சட்டை மாறன்: இந்த வீடியோவைப் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், " திமுக ஆட்சியை விமர்சித்து பக்கம் பக்கமாக ட்விட்டர் அறிக்கை வெளியிட்டீர்களே விஜய்.
இப்போது உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா?
இந்த தாயை நேரில் சென்று சந்திப்பீர்களா அல்லது அவர் உங்களை சந்திக்க வர வேண்டுமா அல்லது சந்திக்கவே மாட்டீர்களா?" என்று காட்டமாக விமர்சித்து கேள்வி எழுப்பி உள்ளார். அவரது இந்த கேள்வி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்கொலை தீர்வல்ல: வாழ்க்கையின் தற்காலிகப் பிரச்சினைகளுக்கு தற்கொலை ஒருபோதும் தீர்வல்ல. அது நம்மை நேசிப்பவர்களுக்கு ஆறாத வடுக்களையே தரும். மனபாரம் அதிகமாகும்போது, தகுந்த நபர்களிடம் பேசிப் பகிர்வதே புத்திசாலித்தனம். துணிவோடு எதிர்கொண்டால் எந்த சவாலையும் வெல்லலாம். நம் உயிர் விலமதிப்பற்றது, வாழ்ந்து காட்டுவோம்!
இலவச மனநல உதவி எண்கள்:
சினேகா (Sneha Helpline): 044-24640050
மத்திய அரசு உதவி எண் (KIRAN): 1800-599-0019
மாநில அரசு உதவி எண்: 104


Click it and Unblock the Notifications