கேக்குறவன் கேனப்பயலா இருந்தா.. திருந்தலயா சீமான், மிஷ்கின்.. சுளீர் கேள்விகளைக் கேட்ட ப்ளூ சட்டை மாறன்
சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்திலும் சரி, அரசியல் தளத்திலும் சரி கடந்த சில நாட்களாக நடைபெறும் சில விஷயங்கள் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தினை ஈர்த்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பாட்டில் ராதா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின் தான் குடித்துவிட்டுத்தான் கல்லூரி விழாவில் பாடினேன் எனத் தெரிவித்தார் அதேபோல் கள் விடுதலை மாநாட்டில் கலந்து கொண்ட சீமான், தான் கள் அருந்திவிட்டுத்தான் கல்லூரிக்குப் போவேன் எனத் தெரிவித்துள்ளார் அதேபோல், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறும்போது மாட்டு மூத்திரம் 80 வகையான நோய்களை குணப்படுத்தும் எனக் கூறினார். இது தொடர்பாக சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாட்டில் ராதா படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், கலந்து கொண்டு பேசிய, இயக்குநர் மிஷ்கின் குடிப்பழக்கம் குறித்து சிலாகித்து பேசினார். மேலும், ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தியும் பேசினார். தான் குடிகாரனாக மாறியதற்கு இளையராஜாதான் காரணம், அவரால்தான் நான் குடிகாரன் ஆனேன் என இளையராஜாவையும் ஒருமையில் பேசினார். இதுமட்டும் இல்லாமல், கல்லூரியில் அவர் மூன்று ஆண்டுகள் பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கியதாகவும், அந்த மூன்று ஆண்டுகளும் குடித்துவிட்டுப்போய்தான் பாடினேன் எனவும் கூறினார். இவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
மாட்டின் சிறுநீர்: கடந்த வாரத்தில் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பசுவின் சிறுநீர் உடலுக்கு நல்லது என்றும், அதை அருந்துவதால் பல காய்ச்சல்கள் குணமாகின்றது என்றும் கூறினார். இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறும்போது மாட்டு சிறுநீர் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்துவிடும் என பயப்படுகின்றார்கள். மாட்டின் சிறுநீர் மருந்து என்று சொன்னால் மறுக்கின்றார்கள் என ஒரு விழாவில் பேசியுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன்: இது தொடர்பாக திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில், “ சாராயம் - கள் - கோமியம்: கல்லூரியில் மூன்று வருடமும் பாட்டுப் போட்டியில் நான்தான் முதல் பரிசு வாங்கினேன். மூன்று முறையும் செமையாக குடித்து விட்டுதான் பாடினேன் - மிஷ்கின். கள் குடித்து விட்டுதான் கல்லூரிக்கே போவேன் - சீமான். கேக்கறவன் கேனப்பயலா இருந்தா கேப்பைல நெய் வடியுமாம். அப்படிப்பட்ட கல்லூரிகளின் பெயரென்ன? இப்படி உங்களை எத்தனை நாள் அனுமதித்தார்கள்? ஒரு ஆசிரியர் கூட உங்களை கண்டிக்கவில்லையா? கண்டித்தும் நீங்கள் திருந்தவில்லையா?
பெரிய பருப்பு: நானும் பெரிய பருப்புதான் என காட்டிக்கொள்ள இன்னும் எத்தனை டன் பொய் மூட்டைகளை வைத்துள்ளீர்கள்? மொத்தமாக அவிழ்த்து விடுங்கள். கோமியம் மதுவை விட மோசமானது இல்லை. அது 80 வகை காய்ச்சலை சரி செய்யும் - தமிழிசை. இதை உலக மருத்துவர்கள்/அறிவியல் ஆய்வாளர்கள் எத்தனை பேர் ஒப்புக்கொண்டுள்ளனர்? அதுவும் 80 வகையான காய்ச்சலை தீர்க்கும் என சொல்வது எதன் அடிப்படையில்?” என காட்டமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். இவரது பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











