Vijay: கூத்தாடி.. விஜய்க்கு ஆதரவாக பேச நடிகர்களுக்கு திராணி இல்லை.. ஏத்திவிடுறாரா ப்ளூ சட்டை மாறன்
சென்னை: விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்த பின்னர் அரசியல் மேடை, சினிமா மேடை என அனைத்திலும் பரபரப்பைக் கிளப்பும் செய்திகள் அவரைச் சுற்றியோ, அல்லது அவரை மையப்படுத்தியோ எதாவது வந்துகொண்டே உள்ளது. அப்படியான விஷயம்தான் கடந்த சில தினங்களாக வலம் வந்தவாறு உள்ளது. அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொகுத்த புத்தகமான, 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தக வெளியீட்டு விழா, அரசியல் தளத்திலும் சினிமா துறையிலும் அடுத்தடுத்து விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
அதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. இவரது வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனமும், விகடன் பப்ளிகேஷன்ஷும் இணைந்து தொகுத்த புத்தகமான, 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தகம் கடந்த 6ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், முதலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொளவதாக இருந்தது. அதன் பின்னர் அவர் விழாவில் பங்கேற்க முடியாது என மறுத்துவிட்டார்.

ஆனால், புத்தக உருவாக்கத்தில் முக்கிய காரணமாக இருந்த ஆதவ் அர்ஜுனாவைக் கலந்து கொள்ளும்படியும் கூறியிருந்தார். இந்த விழாவில், விஜய் திருமாவவன் குறித்து பேசியதும், ஆதவ் அர்ஜுனா திருமாவளவன் குறித்து பேசியதும் பெரும் கவனத்தினை ஈர்த்தது. இது தொடர்பாக பல ஊடகங்களில் விவாதங்களும் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்கும்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷானவாஸ் விஜய் குறித்து பேசும்போது, அவரைக் கூத்தாடி எனக் குறிப்பிட்டார். இது பலருக்கும் அதிருப்தியைக் கொடுத்தது.
ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் இது தொடர்பாக பிரபல சினிமா விமர்சகரும், இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதாவது, ”சில தினங்களுக்கு முன் நடந்த விவாத நிகழ்ச்சியில் விஜய்யை கூத்தாடி என கோபமாக சாடினார் விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ். விவாத நிகழ்ச்சிகளில் நாகரீகமாகவும், அமைதியாகவும் பேசும் மிகச்சிலரில் இவரும் ஒருவர். ஆனால் இம்முறை பொறுமை இழந்து இப்படியொரு வார்த்தையை பேசியுள்ளார்.சினிமா நடிகர்களை கட்சியில் சேர்ப்பது, பிரச்சாரத்திற்கு அழைப்பது, வெற்றிக்காக வாய்ஸ் தர சொல்வது, கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் அருகே அமர வைப்பது, அவர்களின் படங்களை ப்ரிவியூ ஷோ பார்ப்பது.
கூத்தாடி: அரசியல் மேடைகளில் நடிகர்களை போல உள்ளவர்களை ஆட வைப்பது.. என அனைத்திற்கும் அவர்களை ஏன் அழைக்கிறீர்கள்? உங்கள் தலைவர் கூட படங்களில் படித்துள்ளார். ப்ரிவியூ ஷோ பார்த்து விமர்சனம் சொல்கிறார். தனது பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு திரையுலகினரை அழைத்து பேச சொல்கிறார். அப்போதெல்லாம் நடிகர்கள் மீது உங்களுக்கு கோவம் வரவில்லையா? கூத்தாடி எனும் வார்த்தை எப்படி உங்களைப்போன்ற சட்டம் படித்தோருக்கு கூட இழிவான சொல்லாக மாறியது?
திராணி: வேறு துறையை அல்லது சமூகத்தை சேர்ந்தோரை இப்படி பேசியிருந்தால்.. போராட்டம் வெடித்திருக்கும். நீங்களும் உடனே மன்னிப்பு கேட்டிருப்பீர்கள். ஆனால் சினிமாக்கரர்களிடம் ஒற்றுமை இல்லாததால். இப்படி பேசியுள்ளீர்கள். இதை கண்டிக்க ஒரு நடிகருக்கும் திராணி இல்லை. அதில் ஆச்சர்யமும் இல்லை. நேற்று நடந்த சினிமா நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் மட்டும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். வரும் தேர்தலில் சினிமா சம்மந்தப்பட்ட எவரும் உங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டாம், எங்களுடன் மேடையேற வேண்டாம். இனி சினிமா சார்ந்த நிகழ்வுகளில் நாங்கள் பங்கேற்பதில்லை என உறுதியளிக்க இயலுமா? தங்கள் பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பீர்களா?” என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











