ஏத்திவிட்ட ஏணிகளை எட்டி உதைக்கும் வடிவேலு?.. ராஜ்கிரணோடும் பஞ்சாயத்து? 4 பக்கமும் சுத்து போடுறாங்களே
சென்னை: வடிவேலு தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமானவர்களை கண்டுகொள்ளவே இல்லை என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே அவரது செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன. உதாரணமாக விஜயகாந்த் மறைவுக்கு இன்றுவரை அவர் இரங்கல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது கடுமையான கண்டனங்களை அவருக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறது.
சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது. ஆனால் எதற்கும் அஞ்சவில்லை வடிவேலு.

தனி பாணி: தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். இதனால் அவரது வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருந்தது. ஒருகட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும்; காலம் மாறியதன் காரணமாகவும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.
வைகை புயல்: அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு. தனக்கென தனி டீமை உருவாக்கி காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். இதனால் அவரது வளர்ச்சி 2000களின் தொடக்கத்தில் புயல் வேகத்தில் இருந்தது. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார் வைகை புயல் வடிவேலு.
பஞ்சாயத்து: இப்படி படு பயங்கரமாக வளர்ந்து அவரது கிராஃப் உயரத்தில் இருந்தது. ஆனால் அவர் ஏறிய அரசியல் மேடை அந்த கிராஃபை சட்டென்று கீழே இறக்கியது. 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அப்போது ஜெயலலிதா, விஜயகாந்த்தை கடுமையாக தாக்கி பேசினார். ஆனால் அவர் எவ்வளவு பேசியும் திமுக அந்தத் தேர்தலில் தோல்வியையே சந்தித்தது. இதனையடுத்து திரையுலகிலிருந்து அவர் ஒதுக்கப்பட்டார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வனவாசம் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வந்தார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் அடுத்ததாக வெளியான மாமன்னன் மாபெரும் வெற்றி பெற்றது. அதனையடுத்து நடித்த சந்திரமுகி 2 ஃப்ளாப் ஆனது. இந்த சூழலில் தற்போதும் வடிவேலுவை சுற்றி சர்ச்சைகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.
கண்டுக்காத வடிவேலு: அதாவது அவர் தன்னுடன் பணியாற்றியவர்களை வளரவிட்டதில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம் இருக்க; தன்னை வளர்த்துவிட்டவர்களையே கண்டுகொள்ளவில்லை என்ற விமர்சனமும் எழுந்திருக்கின்றது. சமீபத்தில் உயிரிழந்த விஜயகாந்த்துக்கு இதுவரை வடிவேலு இரங்கல் தெரிவித்ததில்லை. அதேபோல் தன்னை அறிமுகப்படுத்திய ராஜ் கிரணுக்கு ஒரு உதவி செய்துவிட்டு அதை எல்லோரிடமும் சொல்லி காண்பித்ததாகவும் ஒரு தகவல் உண்டு.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏற்றி விடும் ஏணிகளை எட்டி உதைக்கும் வடிவேலு: சில தினங்களுக்கு முன்பு கலைஞர் 100 நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாமேடைக்கு கார் பார்க்கிங்கில் இருந்து பேட்டரி கார் மூலம் முக்கிய திரையுலகினர் அழைத்து செல்லப்பட்டனர். அதில் ஆறேழு பேர் பயணம் செய்யலாம்.

ஆளுக்கு ஒரு பேட்டரி கார் வருமென நினைத்திருந்தார்கள். ஆனால் ஏற்கனவே சோனியா அகர்வால் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே நயன்தாரா அமர வைக்கப்பட்டதால் அப்செட் ஆனார் அவர். அடுத்து வடிவேலு வந்தார். பேட்டரி காரில் ராஜ்கிரணுக்கு அருகே அமர்வோம் என அவர் எதிர்பார்க்கவில்லை. அதனால் கடுப்பான வடிவேலு... உடனே வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டார். ராஜ்கிரணை ஏறிட்டுகூட பார்க்கவில்லை.
அதன்பிறகு வந்த பேட்டரி காரில் டிரைவருக்கு அருகே அமர்ந்து விழா மேடைக்கு சென்றார். நிகழ்ச்சியில் பேசியும், பாடியும் கைத்தட்டல் வாங்க ஒத்திகை பார்த்துவிட்டு வந்தவருக்கு... அந்த வாய்ப்பு அமையாமல் போனதால் அதிருப்தி அடைந்தார். வடிவேலுவின் வளர்ச்சிக்கு வாய்ப்பு அளித்தவர்கள் ராஜ்கிரணும், கேப்டனும். டி.ராஜேந்திரன் என் தங்கை கல்யாணி படத்தில் அறிமுகமாகி அதில் சில நொடிகள் நடித்தார்.
அதன்பிறகு முறைப்படி அவரை அழைத்து காமடி கேரக்டரும், ஒரு பாடல் காட்சியும் அளித்து உதவியர் ராஜ்கிரண். அடுத்து சின்னக்கவுண்டரில் வாய்ப்பு தந்தார் விஜயகாந்த். என் ராசாவின் மனசிலே, சின்னக்கவுண்டர் படங்களில் ஏற்கனவே கவுண்டமணி, செந்தில் போன்ற காமெடியன்கள் இருக்கும்போது இவர் எதற்கு என மற்றவர்கள் கூறியும் 'பரவாயில்லை. திறமைசாலி. வாய்ப்பு அளிக்கலாம்' எனக்கூறி கைதூக்கி விட்டார்கள் ராஜ்கிரணும், கேப்டனும். தனக்கு வாழ்வளித்த ராஜ்கிரணை கூட பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார் வடிவேலு" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











