Ajith:அஜித் வெளியிட்ட அறிக்கை! அதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீங்க.. பளிச்சென சொன்ன ப்ளூ சட்டை மாறன்
சென்னை: தமிழ் சினிமா உலகத்திலேயே அஜித் ரசிகர்கள் மட்டுமே வித்தியாசமானவர்கள். அதாவது, நடிகர் அஜித் தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என ரசிகர் மன்றத்தைக் கலைத்தது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் வாழ்க்கையில் முன்னேறப் பாருங்கள், பணத்தை வீணடிக்க வேண்டாம் எனவும், எனது படம் ரிலீஸ் ஆகும்போது, பிடித்தால், நேரம் இருந்தால் வந்து பாருங்கள் எனவும் கூறியிருந்தார். மேலும் தனக்கு பட்டப்பெயர்கள் எதுவும் வேண்டாம் எனவும் கூறியிருந்தார். எனவே அல்டிமேட் ஸ்டார், தல போன்ற பட்டப் பெயர்களைத் துறந்தார். மேலும் தன்னை அனைவரும் அஜித்குமார் என்றே அழைக்க ஆசைப்படுகின்றேன் எனக் கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அஜித்குமார் ரசிகர்கள், பொது இடங்களில் கூடும்போது அஜித்தே கடவுளே எனக் கூறி கத்திக் கொண்டு இருக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் பல உள்ளது. மேலும் சில நேரங்களில் அஜித்தே கடவுளே என்ற ஹேஸ்டேக் கூட ட்ரெண்ட் செய்யப்படுகின்றது. இது பலருக்கும் பல இடங்களில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தெரிந்து கொண்ட அஜித் குமார், இது போன்ற விஷயங்களைத் தவிர்க்கும்படி, அறிக்கை வெளியிட்டார். அதில், " சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க.... அஜித்தே "என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
கோரிக்கை: எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

கிறுக்கு வேலைகள்: அஜித்குமாரின் இந்த அறிக்கை தொடர்பாக ப்ளூ சட்டை மாறனின் கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, " சமீபத்தில் நடந்த சில பள்ளி நிகழ்ச்சிகளில் மேடையில் விருந்தினர்கள் பேசும்போது.. இப்படியான கோஷங்களை மாணவர்கள் எழுப்பியது அதிர்ச்சியை அளித்தது. ஏழு கழுதை வயதான நபர்களும் இப்படி கோஷம்போடுவது கேவலம். அஜித் தற்போது கூறியிருப்பது... இதற்கு மட்டுமல்ல. எப்போதும் இப்படியான கிறுக்கு வேலைகள் வேண்டாம் என்பதே.

அவமானம்: நடிப்பது மட்டுமே தனது வேலை. ரசிகர்களின் நேரம், பணம், உழைப்பை சுரண்டி பிழைப்பதல்ல என்பதை பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறார். அதுபோல.. படம் பார்ப்பதோடு நிறுத்திவிட்டு படிப்பு மற்றும் வேலையை பார்க்கவும். இனி இப்படியான வெட்டி கோஷங்களுக்கு அவரது பெயரை பயன்படுத்த வேண்டாம். அதை மீறி யாரேனும் செய்தால்.. அதை பிடித்து தொங்கி வைரலாக்க வேண்டாம். இதற்கு மேலும் திருந்தாவிட்டால்.. அவமானம் தமிழகத்திற்கும், உங்கள் குடும்பத்திற்கும்தான்" என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











