கங்குவா சூர்யாவுக்கு ஆஸ்கார் உறுதி.. ஜோதிகாவால் மீண்டும் களத்தில் குதித்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸானது. படத்துக்கு பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்துவருகின்றன. வசூல் ரீதியாகவும் படத்துக்கு பாதகமே ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சூர்யாவும் அவரது ரசிகர்களும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா கங்குவா திரைப்படம் பற்றி இன்று பதிவு வெளியிட்டிருந்தார். அதனையடுத்து மீண்டும் கங்குவாவை வைத்து செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
சூர்யாவை வைத்து சிவா இயக்கிய கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. அதிக பட்ஜெட் படம், சூர்யாவுடன் முதன்முறையாக சிவா இணைந்தது என்று படத்துக்கு ஏகப்பட்ட ஹைப் ஏற்றப்பட்டது. அதேபோல் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், சூர்யாவும் கொஞ்சம் ஓவராகவே பட ரிலீஸுக்கு முன்னதாக பேசினார்கள். ஆனால் அவர்கள் பேசிய அளவுக்கு படத்தில் பெரிதாக எதுவும் இல்லை. இதன் காரணமாக படத்தை கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.

ஜோதிகா காட்டம்: சூழல் இப்படி இருக்க இந்த டாபிக்கை கொஞ்சம் மறக்கும்படியாக தனுஷ் - நயன்தாரா விவகாரம் நேற்று வெடித்தது. ஆனால் இன்று காலை ஜோதிகா கங்குவா படம் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டிருந்தார். அந்தப் போஸ்ட்டில் அவர், "நடிகராக இருப்பதற்காகவும், சினிமாவை முன்னோக்கி அழைத்து செல்ல கனவு காண்பதற்காகவும் சூர்யாவை நினைத்து பெருமையாக இருக்கிறது. படத்தின் முதல் அரைமணி நேரம் ஒர்க் அவுட் ஆகவில்லைதான். ஒலியும் சரியாக இல்லைதான். அதேசமயம் குறைபாடுகள் என்பது படத்தில் ஒரு பகுதியாகும்.
அவர்கள் கொடுக்கவில்லை: முழுமையான மூன்று மணி நேரத்திலிருந்து முதல் அரைமணி நேரம் சரியில்லைதான். இருந்தாலும் இது ஒரு முழுமையான சினிமா அனுபவம். தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத கேமரா வேலையை ஒளிப்பதிவாளர் வெற்றி செய்திருக்கிறார். ஊடகங்கள் மற்றும் சிலரின் நெகட்டிவ் விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின் தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்ற படங்களுக்கு இந்த அளவு நெகட்டிவ் விமர்சனங்களை அவர்கள் கொடுக்கவில்லை.
மறந்துவிட்டார்கள்: படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களின் ஆக்ஷன் காட்சி போன்ற பாசிட்டிவ்களை விமர்சகர்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். 3டி தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளில் படக்குழு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கைதட்டல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் முதல் நாள் முதல் ஷோ முடிவதற்கு முன்பாகவே கங்குவாவுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. அதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. கங்குவா டீம் பெருமையாக இருங்கள். நெகட்டிவ் விமர்சனங்கள் தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்காக வேறு எதையும் செய்யவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் களத்தில்: ஜோதிகாவின் இந்தப் போஸ்ட்டை அடுத்து மீண்டும் கங்குவா பக்கம் தங்களது கவனத்தை திருப்பியிருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "எதுக்கு சார் வம்பு. படம் நன்றாக இல்லை என்று சொன்னால் திட்டமிட்ட சதி, வன்மம், தொன்மம் என்று திட்டுவீர்கள். உங்களுக்கு ஆஸ்கார் உறுதி. உலகின் மிகச்சிறந்த படம் கங்குவாதான். ஆளை விடுங்கள் சாமியோ. போங்கய்யா எல்லோரும் இரண்டாவது தடவை பாருங்க. பப்ளிக் ரிவ்யூ, சோஷியல் மீடியா முழுவதும் அன்பை விதைத்து தள்ளுங்கள். ஸ்ப்ரெட் பாசிட்டிவிட்டி" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











