தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்.. கமலின் கருத்து.. ரஜினியை கோர்த்துவிடும் ப்ளூ சட்டை மாறன்
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வெளியாகவிருக்கிறது. பட ரிலீஸுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அதேசமயம் கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியிருக்கும் கருத்து கர்நாடக மாநிலத்தில் கொதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் அம்மாநிலத்தில் படத்துக்கு சிக்கல் வரும் சூழல் உருவாகியிருக்கிறது .
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் இன்றுவரை பெரும்பாலானோரால் கொண்டாடப்படுகிறது. கிட்டத்தட்ட 38 வருடங்களுக்கு பிறகு அந்தக் கூட்டணி தக் லைஃப் படத்தில் இணைந்திருக்கிறது. இதில் கமலுடன் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. வழக்கம்போல் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
கதை கமலுடையது: இந்தப் படத்தின் கதையை மணிரத்னம் எழுதவில்லை. அவர் கமலிடம் சொன்னது வேறு ஒரு கதையை. ஆனால் அந்தக் கதையை படமாக்கினால் எக்கச்சக்க பட்ஜெட் ஆகும் என்ற நிலைமை இருந்ததால்; தன்னிடம் இருந்த கதையின் ஐடியாவை பற்றி மணியிடம் கமல் சொல்ல; அதை ஓகே சொல்லி தன்னுடைய ஸ்டைலில் மணிரத்னம் டெவலப் செய்திருக்கிறார். முதன்முறையாக கமலின் கதையை மணிரத்ன இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டையை கிளப்பிய ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில்தான் வெளியானது. ட்ரெய்லரில் கமலுக்கும், சிம்புவுக்கும் இடையேயான மோதல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அதேபோல் அபிராமியுடனான லிப் லாக், திரிஷாவுடனான ரொமான்ஸ் என பல விஷயங்கள் அந்த ட்ரெய்லரில் இருந்தன. முக்கியமாக திரிஷாவுடனான ரொமான்ஸ் காட்சியை வைத்து பலரும் விமர்சனமும், கிண்டலும் செய்தார்கள். அதேசமயம் கண்டிப்பாக படம் பந்தயம் அடிக்கும் என்ற நம்பிக்கையை கொடுத்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.
சூடுபிடிக்கும் ப்ரோமோஷன் பணிகள்: பட ரிலீஸுக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இதன் காரணமாக ஆடியோ வெளியீட்டு விழாவை முடித்த கையோடு ப்ரோமோஷன் பணிகளை முடுக்கிவிட்டது படக்குழு. மாநிலம் மாநிலமாக பறந்து சென்று பேட்டிகள் கொடுத்துவருகிறார்கள். கமல், சிம்பு, அசோக் செல்வன், அபிராமி, மணிரத்னம் என படக்குழு பம்பரமாய் சுழன்றுகொண்டிருக்கிறது. இதற்கிடையே ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
என்ன பேசினார்?: அதாவது அந்த விழாவில் சிவராஜ்குமாரை பார்த்து, 'தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்று தெரிவித்தார். அதனையடுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா உள்ளிட்டோர் கமலுக்கு கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கமல் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால் கர்நாடகாவில் படம் ரிலீஸ் ஆகாது என்று அம்மாநிலத்தை சேர்ந்த சில அமைப்புகளும் கூறின. ஆனால் அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் கமல்ஹாசன்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: அதேசமயம் இந்த விவகாரத்தில் கமலுக்கு ஆதரவாக சிவராஜ்குமார் பேசியிருக்கிறார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான ப்ளூ சட்டை மாறன் இவ்விஷயத்தில் ரஜினிகாந்த்தை கிண்டல் செய்திருக்கிறார். அதாவது நகரம் படத்தில் வடிவேலு மற்றும் சுந்தர்.சி ஆகியோர் வரும் ஒரு சீனுடைய ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்து வடிவேலுவை ரஜினிகாந்த்தாகவும், சுந்தர்.சியை பத்திரிகையாளராகவும் குறிப்பிட்டு, 'தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்னு கமல் சொல்லி இருக்காரு. அவருக்கு உங்க ஆதரவு இருக்கா சார்? என்று ரஜினியிடம் கேட்பது போன்றும்; அதற்கு ரஜினி அந்த இடத்திலிருந்து நழுவி செல்வது போன்றும் மீமை பகிர்ந்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், 'எந்த பிரச்னை என்றாலும் அதில் ரஜினியை ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து கோர்த்துவிடுகிறாரே' என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











