சிவகுமாரால் மீண்டும் சிக்கிய சூர்யா.. ரசிகர்கள் மட்டுமில்லை ப்ளூ சட்டையும் களத்தில் குதிச்சிட்டாரே
சென்னை: சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினர், சிவகுமார், சூர்யாவின் மகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். கங்குவா படத்தில் வாங்கிய அடி காரணமாக இந்த ஆடியோ ரிலீஸில் சூர்யா கொஞ்சம் அடக்கியே வாசித்தார். ஆனால் சிவகுமார் பேசியிருக்கும் விஷயத்தை வைத்து பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சூர்யா உள்ளிட்டோர் இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என்று கூறினார்கள். முக்கியமாக தயாரிப்பாளர் ஞானவேலோ கொஞ்சம் ஓவர் டோஸாகவே ஹைப்பை ஏற்றினார். அதாவது படத்தின் இரண்டாவது பாக ரிலீஸுக்கு போட்டியாக எந்தப் படமும் வராது; இந்த முதல் பாகம் நிச்சயமாக இரண்டாயிரம் கோடி ரூபாய்வரை வசூலிக்கும் என்றெல்லாம் கூறினார்.

200 கோடி ரூபாய்கூட இல்லை: ஆனால் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அப்செட்தான் ஏற்பட்டது. படத்தில் ஒன்றுமே இல்லையே; பிறகு ஏன் இவவளவு எதிர்பார்ப்பை எகிற வைத்தார்கள் என்று கூறி ஓபனாகவே அடித்தார்கள். இதனால் சூர்யாவும், அவரது ரசிகர்களும் செய்வதறியாது திகைத்தார்கள். அதுமட்டுமின்றி படமோ 200 கோடி ரூபாய்வரைகூட வசூலிக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க ஜோதிகாவும் தனது பங்குக்கு, 'கங்குவா படத்தின் மீது வேண்டுமென்றே விமர்சனத்தை வைக்கிறார்கள்' என்று பேசினாஆர். அதனையும் பலர் ட்ரோல் செய்தார்கள்.
ரெட்ரோவில் சூர்யா: கங்குவா திரைப்படத்தின் தோல்வியைத் தொடர்ந்து எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டுமென்ற நோக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படமானது மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தின் மீது சூர்யா ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் வைத்திருக்கிறார்கள்.மேலும் இந்தப் படமும் தோல்வியடைந்துவிட்டால் இன்னும் கொடுமையாக ட்ரோல் செய்வார்களே என்றும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
அடக்கி வாசித்த சூர்யா: இப்படிப்பட்ட சூழலில்தான் ரெட்ரோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் சூர்யா மற்றும் படக்குழுவினர் தாண்டி சிவகுமார், சூர்யாவின் மகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவில் அதிகம் பேசி சூடுபட்டுக்கொண்ட அனுபவம் இருந்ததன் காரணமாக ரெட்ரோ ஆடியோ வெளியீட்டு விழாவில் சூர்யா ரொம்பவே அடக்கித்தான் வாசித்தார். இதனைப் பார்த்த பலரும் பரவாயில்லை சூர்யா திருந்திவிட்டார் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
சிவகுமாரின் பேச்சு: ஆனால் சிவகுமாரின் பேச்சு ட்ரோலாகியுள்ளது. அவர் பேசுகையில், "தமிழ் சினிமாவில் உடம்பை வருத்திக்கொண்டு, சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யார் இருக்கிறார். சூர்யாவுக்கு முன்னரே அதை செய்தவர் யார்?.. அவருக்கு பின்னர் செய்தவர் யார்? கார்த்தி செய்திருக்கிறாரா?.. ஆனால் அப்படி உடலை போட்டு வருத்திக்கொள்வது தவறு என்று அவரை மருத்துவர் எச்சரிக்கை செய்தார்" என்று பேசினார். அவரது இந்தப் பேச்சை பார்த்த தனுஷ், விக்ரம், சூரி உள்ளிட்டோரின் ரசிகர்கள் எல்லாம் சூர்யா மட்டும்தான் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார் என்று சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய் என்று விமர்சிக்க தொடங்கினார்கள்.
அந்தவகையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் சிவகுமாரின் அந்தப் பேச்சை குறிப்பிட்டு, "சூர்யாவுக்கு முன்னாடி Six Packs வச்சவன் யாரு இருக்கா?' - சிவகுமார் ......இது என்னடா புது புரளியா இருக்கு" என்று பதிவிட்டிருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள், கங்குவாவில் சிக்கிய சூர்யா இப்போது அடக்கி வாசித்தாலும் சிவகுமாரால் மீண்டும் ட்ரோலுக்கு சிக்கிவிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











