கள்ளக்குறிச்சி சம்பவம்.. கமல், சூர்யா, சத்யராஜ் சைலன்ட்.. ப்ளூ சட்டை மாறன் போட்ட எஸ்கே பட மீம்!
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் பலியான சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. ஏகப்பட்ட டாஸ்மாக் வைத்து மது பிசினஸை நடத்தி வரும் போதே இப்படி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கும் சம்பவம் அரங்கேறும் அளவுக்கு அரசு மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறதே என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முதன் முதலாக அரசுக்கு எதிராக இந்த பிரச்சனையை கையில் எடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், மற்ற போராளி நடிகர்கள் எல்லாம் மெளனம் காத்து வருவது ஏன் என்கிற கேள்வியை ப்ளூ சட்டை மாறன் தற்போது மீம் மூலம் முன் வைத்துள்ளார்.
37 பேர் பலி: "குடி குடியை கெடுக்கும்", "மது நாட்டுக்கும் கேடு.. வீட்டுக்கும் கேடு" என எத்தனை அறிவுரைகளை சொன்னாலும் குடிமகன்கள் மது போதைக்கு அடிமையாகவே உள்ளனர். வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி கிடப்பதை தாண்டி கள்ளச்சாராயத்தையும் குடித்து தற்போது கள்ளக்குறிச்சியில் 37 பேர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவலையை மறக்க குடிக்கிறேன் என குடும்பத்தை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு செத்து மடிந்து விட்டனர்.
விஜய் கண்டனம்: "கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." என தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கமல், சூர்யா, சத்யராஜ்: ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், கமல்ஹாசன், சூர்யா மற்றும் சத்யராஜ் எல்லாம் இந்த சம்பவத்துக்கு வாய் திறக்காமல் அமைதி காப்பது ஏன் என சிவகார்த்திகேயனையும் சும்மா விடாமல் அவர் நடித்த ரஜினி முருகன் படத்தில் இருந்து ஒரு மீம் டெம்பிளேட்டை போட்டு பங்கமாக கலாய்த்துள்ளார்.

சூர்யாவை யாராச்சும் பாத்தீங்களா?: தொடர்ந்து நடிகர் சூர்யாவை டார்கெட் செய்து ப்ளூ சட்டை மாறன் தாக்கி வருகிறார். "சூர்யாவை யாராச்சும் பாத்தீங்களா?" என தொடர்ந்து பல மீம்களை போட்டு வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு "இப்போது மிக்சர் சாப்பிடுவது நாம் தான் மக்களே" என சூர்யா போட்ட ட்வீட்டையும் ஷேர் செய்து அப்போதெல்லாம் ரொம்ப ஆக்டிவாக இருந்த சூர்யா திமுக ஆட்சியில் மட்டும் அமைதி காப்பது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார். தலைவர் ரஜினிகாந்தை மறந்துட்டீங்க பாஸ் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











