Vijay: கைதி பிகிலை கதறவிட்டது என்பது பொய்.. ஃபையர் விட்ட எஸ்.ஆர். பிரபுவுக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி
சென்னை: தமிழ் சினிமா உலகில் ரசிகர்கள் மோதிக் கொள்வது என்பது வழக்கமான ஒன்றாகத்தான் கடந்து போகவேண்டியுள்ளது. எவ்வளவுமுறை நடிகர்களே சொல்லிக்கொண்டாலும் ரசிகர்கள் கேட்பதாக இல்லை. இப்படியான நிலையில் அண்மையில் வெளியான கங்குவா படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர் விஜய் ரசிகர்களுக்கும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையிலான சண்டை என்பதைக் கடந்து விஜய் ரசிகர்களுக்கும் சூர்யாவுக்கு நெருக்கமானவர்களுக்குமான சண்டையாக மாறியது. இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு நேரடியாகவே விஜய் ரசிகர்ளை சீண்டியிருந்தார். அதற்கு ப்ளூ சட்டை மாறன் பதில் அளித்துள்ளார். அது குறித்து காணலாம்.
சூர்யா இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 14ஆம் தேதி வெளியான படம் கங்குவா. இந்தப் படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் இந்தப் படம் உருவானது. படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ஆனால் படத்தின் பின்னணி இசை மற்றும் திரைக்கதை ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களைச் சந்தித்தது. இன்னும் சொல்லப்போனால் நெகடிவ் விமர்சனங்களைத்தான் பெற்றது. இதனால் சூர்யாவுக்கு நெருக்கமானவர்கள் தரப்பில் இருந்து, கங்குவா படத்தினை திட்டமிட்டு காலி செய்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக சூர்யாவின் மனைவி ஜோதிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்குவா படம் குறித்து எழுதியிருந்தார். அதில், தமிழ் சினிமாவில் இதற்கு முன்னர் வெளியான பல படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ள படங்கள் வந்துள்ளது. பெண்கள் பின்னால் ஆண்கள் சுற்றுவதைப்போன்ற படங்கள் அதிகம் வந்துள்ளது. ஆனால், அந்தப் படங்களைக் கூட இந்த அளவிற்கு விமர்சனம் செய்ததில்லை. இப்படியான நிலையில் கங்குவா படத்தினை திட்டமிட்டே விமர்சித்து, படத்தின் வசூலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளனர் எனக் குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த போஸ்ட் விஜய்யின் கோட் படத்தினை குறிப்பதாக பலரும் இணையத்தில் கூற, விஜய் ரசிகர்கள் ஜோதிகாவை ரவுண்டு கட்டினர்.

எஸ்.ஆர். பிரபு: இப்படியான நிலையில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இருந்து முதல் நாள் முதல் காட்சி குறித்து ரசிகர்களின் விமர்சனங்களை பதிவு செய்ய திரையரங்க உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது என அறிக்கை வெளியிடப்பட்டது. இப்படியான நிலையில் இந்த அறிக்கையை விஜய் ரசிகர்கள் தரப்பில் இருந்து, தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவராக இருக்கும் ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர். பிரபு, சூர்யாவின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் எனக் குறிப்பிட்டனர். மேலும் அதனால்தான் இப்படியான அறிக்கை வந்துள்ளதாகவும் கூறினர்.

கைதி - பிகில்: இந்தப் பதிவுக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது எக்ஸ் பக்கத்தில், " என்னடா தம்பி ஒரு அடி திருப்பி அடிச்சதுக்கே 5 வருசமா கதறிகிட்டு இருக்கீங்க. மக்கள் பணி நிறைய இருக்கு, போய் அண்ணணுக்கு துணையா அடுத்த வேலைய பாருங்கடா! நல்ல மனுசன், அவரு பேர கெடுத்துட்டு திரியாதீங்க!!" என பதிவிட்டார். இவரது இந்தப் பதிவு 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன பிகில் மற்றும் கைதி படங்களைக் குறிப்பிட்டு இருந்தது.

ப்ளூ சட்டை மாறன்: இதனால் எஸ்.ஆர். பிரபுவின் பதிவுக்கு விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தது மட்டும் இல்லாமல், கடுமையாக விமர்சனம் செய்தும் வந்தனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், " 2013 பொங்கலுக்கு கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் எனும் அமர காமடி காவியம் வந்தது. இரண்டு நாட்கள் கழித்து சந்தானத்தின் கண்ணா லட்டுதின்ன ஆசையா படம் வந்து மெகா ஹிட்டாகி. அலெக்ஸ் பாண்டியனை கதற விட்டு ஜோலியை முடித்தது. பிகில், கைதி இரண்டுமே வெற்றிப்படங்கள்தான். கைதி.. பிகிலை கதறவிட்டது என்பது பொய்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











