ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல்! பா.ரஞ்சித்தை விமர்சித்தாரா திருமாவளவன்? கோர்த்து விடும் ப்ளூ சட்டை
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி தலைநகர் சென்னையில் அவரது வீட்டுக்கு அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் தனது அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் இன்று அதாவது ஜூலை 20ஆம் தேதி நினைவேந்தல் பேரணி ஒன்று நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித், ஏற்கனவே படுகொலை தொடர்பான காவல்துறை விசாரணை சரியான முறையில் நடைபெறவேண்டும் என அறிக்கை வெளியிட்டப்போதே, நான் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தனது வாக்கினை திமுகவிற்குச் செலுத்தியதாக தெரிவித்திருந்தார். ஜூலை 18ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பா. ரஞ்சித் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுகவிற்கான ஆதரவு என்பதை கேள்விக்குறிதான் என பொருள்படும்படி பேசியுள்ளார்.

எச்சரிக்கை: அந்த செய்தியாளர் சந்திப்பில், “ பிரச்னைகளின் அடிப்படையில் நாம் சில கேள்விகளைக் கேட்கின்றோம். பிரச்னைகளைத் தீர்த்து வைக்காத, பிரச்னைகளைத் தீர்த்துவைக்க முயலாத, பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்கான காரணங்களை ஆராயாதபோது, நமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்வதற்கான தேவை இருக்கும் என நான் நினைக்கின்றேன். இது ஒரு எச்சரிக்கைதான்.
திமுகவுக்கு ஏன் ஓட்டு போட்டேன்: திமுகவுக்குத்தான் ஓட்டுபோட்டேன். ஏன் ஓட்டுபோட்டேன்? மக்களின் பிரச்னை மாறும் என நினைத்தேன். ஆனால் எதுவும் மாறாமல் இது தொடர்ந்து கொண்டே இருப்பது என்பது பெரிய பிரச்னையாக இருக்கின்றது. தொடர்ந்து தலித்துகளின் பிரச்னைகள் இரண்டாம் தரமாக பார்க்கப்படுவதில் எங்களுக்கு பெரிய விமர்சனம் உள்ளது. அந்த விமர்சனத்தை நாங்கள் தொடர்ந்து முன் வைப்போம்” என பேசியிருந்தார்.

விசிக: இந்நிலையில், இன்று நினைவேந்தல் பேரணி நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நினைவேந்தல் பேரணி தொடங்குவதாக நீலம் பண்பாட்டு மையம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த 3 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தனது கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தினை நடத்துவதாக நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் விசிக இதில் கலந்து கொள்ளாது என பேச்சுகள் எழுந்தது. மேலும் விசிக தலைவர் திருமாவளவன் உள்நோக்கத்துடன் இவ்வாறு செய்கின்றார் எனவும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

உள்நோக்கம்: அப்படியான நிலையில் தற்போது திருமாவளன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். மேலும் அதில், " கூலி வாங்கிக் கொண்டு சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிற, அரசியல் அறியாமையில் உலவுகிற சில அற்பர்கள், ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுகவுக்கு எதிராகவும், விசிகவுக்கு எதிராகவும் அவதூறு பரப்பி வருகிறார்கள். அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் விசிக-வினர் பங்கேற்கக் கூடாது.வீரவணக்க நிகழ்வோ, நினைவேந்தலோ நடந்தால் அது விசிக-வின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும். யாரோடும் இணைந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை" என பேசியுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன்: இது தொடர்பாக வெளியான தனியார் தொலைகாட்சி சேனலின் செய்தியை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது மட்டும் இல்லாமல் அதில், “ சமீபத்தில் திமுக அரசை விமர்சித்தார் பா.ரஞ்சித். நினைவேந்தல் நிகழ்வையும் நடத்தவுள்ளதாக கூறினார். அதற்கான பதிலடியா இது?” என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு விவாதத்தை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











