பிரியங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரபலம்.. பர்னிச்சரை உடைத்துவிட்ட ப்ளூ சட்டை!
சென்னை: தமிழ் சின்னத்திரை உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரச்னை என்றால் அது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடைபெற்ற பிரச்னைதான். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலைக்கும் குக்காக இருந்த பிரியங்காவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பெரும் பிரச்னையாக உருவெடுத்து, நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறுவதாக கூறி அறிக்கை அதைத் தொடர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பிரியங்காவிற்கு ஆதரவாக சூப்பர் சிங்கர் பூஜா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ப்ளூ சட்டை மாறன் கமெண்ட் செய்துள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் தனது பணிகளில், பிரியங்கா இடையூறு செய்வதாக கூறி, மணிமேகலை வெளியேறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மணிமேகலை தரப்பில், ஒரு அறிக்கையும் ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பிரியங்கா தரப்பில் எந்தவிதமான பதிலோ விளக்கமோ கொடுக்கப்படவில்லை. அதேநேரத்தில் மணிமேகலையின் பதிவுக்கு ஆதராவாக கமெண்ட் செய்தவர்களும் சில மணி நேரங்களில் தங்களது கமெண்ட்டை டெலிட் செய்கின்றனர்.

மணிமேகலைக்கு ஆதரவு: இதுவரை இந்த விவகாரத்தில் தங்களது மூக்கை நுழைத்து பேசியவர்களில் பெரும்பான்மையானோர், மணிமேகலைக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தனர். பலரோ மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், பிரியங்காவுக்கு எதிராக எதையுமே பேசவில்லை. குறிப்பாக மா.கா.ப. ஆனந்த் இது தொடர்பாக பேசுகையில், தமிழ் நாட்டில் இதுதான் ரொம்ப முக்கியமான பிரச்னையா என பதில் கேள்வி எழுப்பி நழுவிக்கொண்டார். விஜய் டிவியில் முக்கியமான நபராக, இன்னும் சொல்லப்போனால் விஜய் டிவியின் முகமாக இருக்கக் கூடிய நீயா நானா கோபிநாத் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கப்சிப் நிலையிலேயே உள்ளார்.

பிரியங்காவுக்கு எதிர்ப்பு: இதற்கு முன்னர் விஜய் டிவியில் பணி புரிந்தவர்கள் தொடங்கி பிரியங்காவுடன் பல நிறுவனங்களில் பணி புரிந்தவர்கள், பிரியங்காவின் சொந்த வாழ்க்கை குறித்து தெரிந்தவர்கள் வரை, பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை குற்றச்சாட்டாக முன் வைக்கின்றனர். இப்படியானவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு நேரடி காரணமாக இல்லை என்றாலும், பிரியங்காவின் செயல்பாடுகள் ஆதிக்கம் நிறைந்ததாக இருக்க, அதுவே காரணம் எனக் கூறுகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன்: இப்படி பலரும் பலவிதமாக குறிப்பாக பிரிங்காவிற்கு எதிராக பேசி வந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், பிரபலமடைந்த பாடகி பூஜா பிரியங்காவிற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். அதாவது, " என்ன நடந்தது எனத் தெரியாமல் பேசாதீங்க. ஒருவரைப் பற்றி தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம். ஒருவரைப் பாராட்ட மற்றொருவரை கேவலமாக பேசவேண்டாம். உங்களால் அன்பைப் பரப்ப முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் அனைத்து இடங்களிலும் வெறுப்பையாவது விதைக்காமல் இருங்கள்" என கூறியுள்ளார். இது தொடர்பான பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், "தமிழ் நாட்டின் தற்போதைய தலையாய பிரச்னை" என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











