ஜன நாயகன் படத்தில் கமிட்டானேன்.. விஜய் அப்படித்தான்.. எல்லோரும் கேட்டார்கள்.. பாலிவுட் நடிகர் ஓபன்
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்திருக்கிறார் விஜய். அரசியல் கட்சி தொடங்கியிருப்பதால் இந்தப் படம்தான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. இதில் அவருடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் விஜய் குறித்து பாபி தியோல் பேசியிருப்பது ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான நான்கு படங்களுமே விமர்சன ரீதியாக சேதாரத்தை சந்தித்தன. இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் தலைமுறை இயக்குநர்களில் வினோத்துக்கென்று நல்ல பெயர் இருக்கிறது. எனவே அவருடன் முதன்முறையாக விஜய் இணைந்திருப்பது பெரிய எதிர்பார்ப்புக்கு காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.
ரீமேக் படமா?: இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தபோது ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் வெளியாகின. அதையெல்லம் வைத்து பலரும் இந்தப் படம் பகவந்த் கேசரியின் ரீமேக் என்று கூறினார்கள். ஆனால் அப்படி எதுவும் இருக்காது என்பது ரசிகர்களின் நம்பிக்கை. மேலும் இப்படம் அரசியல் ரீதியாக இருக்காது; ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினருக்கும் பிடித்தபடிதான் இருக்கும் என்றும் வினோத் தெளிவுப்படுத்தியிருந்தார்.

அடுத்த வருடம் ரிலீஸ்: படமானது 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இப்போது படத்தின் ஷூட்டிங் எல்லாம் பெரும்பாலும் முடிந்துவிட்டதாகவே தெரிகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை இயக்குநர் விரைவில் தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வெளிநாட்டில் நடக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது.
கடைசி படமா?: இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். அவர் தவிர்த்து பாபி தியோல், மமிதா பைஜு என பலரும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்கள். இதற்கிடையே அரசியல் கட்சியை தொடங்கியிருப்பதால் இதுதான் அவரது கடைசி படம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அதுகுறித்து இன்னும் விஜய் உறுதியான முடிவு எதையும் எடுக்கவில்லை என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இதனால் தளபதி ரசிகர்கள் ஹேப்பிதான்.
பாபி தியோல் பேட்டி: இந்நிலையில் விஜய்க்கு வில்லனாகியிருக்கும் பாபி தியோல் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், "ஜன நாயகன் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறேன். விஜய் மிகப்பெரிய ஸ்டார். அவருடன் நடிக்கிறேன் என்று சொன்னதும்; ஷூட்டிங் எங்கு நடக்கிறது என்றுதான் பலரும் கேட்டார்கள். ஏனெனில் விஜய் ஒரு இடத்துக்கு சென்றால் அவரை பார்க்க ஏராளமானோர் கூடிவிடுகிறர்கள். எனவே ஷூட்டிங்கை ஒழுங்காக நடத்த முடியாமல் போகும். அதனால் லைவ் லொக்கேஷனில் நடத்துவதைவிடவும்; செட்டில் நடத்தினால் நல்லது என்று சொன்னார்கள். அந்த அளவுக்கு விஜய் கொண்டாடப்படுகிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











