என்னை நடிக்க வெச்சு மோசம் பண்ணிடாங்க.... அக்னி தேவி இயக்குனர் மீது பாபி சிம்ஹா போலீசில் புகார்!
அக்னி தேவி இயக்குனர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை: தன்னை நடிக்க வைத்து மோசம் செய்துவிட்டதாக, அக்னி தேவி படத்தின் இயக்குனர் மீது நடிகர் பாபி சிம்ஹா புகார் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் பாபி சிம்ஹா. ஒருகாலத்தில் படுபிசியாக இருந்த அவர், தற்போது குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார்.

அவர் நடிப்பில் உருவாகியுள்ள அக்னி தேவி திரைப்படம் நாளை மறுதினம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு தடை விதிக்கக்கோரியும், இயக்குனர் மீதும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் பாபி சிம்ஹா புகார் அளித்துள்ளார்.
புகாரில் அவர் கூறியிருப்பதாவது, "கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் இயக்கத்தில் அக்னிதேவ் என்ற படத்தில் நடிப்பதற்கு கடந்த 2018ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிறகு, என்னிடம் கூறிய கதையை அவர்கள் எடுக்கவில்லை என்பதை தெரிந்துகொண்டேன்.
இதையடுத்து அந்த படத்தில் இருந்து நான் விலகிவிட்டேன். அதோடு, நான் நடித்த காட்சிகளை என்னிடம் காண்பிக்கச் சொன்னேன். இதனால், ஏற்பட்ட பிரச்சனையால் நான் படத்தில் நடிக்கவில்லை.
இது தொடர்பாக கோவை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், சட்டரீதியாக நடவடிக்கையும் எடுத்து வருகிறேன். இதற்கிடையே, படத்தின் டைட்டிலை அக்னி தேவி என்று மாற்றிவிட்டனர். இப்படம், வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் நான் நடிக்கவே இல்லை. எனக்குப் பதிலாக டூப் மற்றும் கிராபிக்ஸ் செய்துள்ளனர். நான் நடித்துள்ளதாக பொய்யாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
எனவே இயக்குனர் ஜான் பால்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாபி சிம்ஹா கோரியுள்ளார். இதையடுத்து, நந்தம்பாக்கம் போலீசார், ஜான் பால்ராஜ் மீது ஆள் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











