எதுக்கு அந்த படத்தில் நடிச்சேனு தெரியல.. குற்ற உணர்ச்சியா இருந்தது.. பேட்ட வில்லன் வருத்தம்!
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி காந்த் நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்தது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசிய பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், அந்த படத்தில் தான் மிகவும் பலவீனமாக இருந்ததாகவும், அது தனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியை தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இளம் இயக்குநர்களாலும் தனது ரசிகர்களை திருப்திபடுத்த முடியும் என முழுவதுமாக நம்பிய ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜுடன் கைகோர்த்த படம் தான் பேட்ட. கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா படம் பிடித்துப்போக ரஜினிகாந்த், பேட்ட கதையில் நடிக்க சம்மதித்தார். படத்தின் கதையை என்னமோ நாம் பார்த்து பார்த்து சலித்துப்போன பழிவாங்கும் கதை தான்.

ஆனால் இதில் நண்பனின் மகனை காப்பாற்ற ரஜினி எடுக்கும் முயற்சியும், , வயதான பின்னரும் சிம்ரன் மீது காதல் மலர்ந்து பின்பு வெளிப்படுத்தும் குறும்புத்தனம் என ரஜினிகாந்த் வெரைட்டி காட்டி நடித்திருந்தார். இந்த படம் ஒரளவிற்கு கலவையான விமர்சனத்தை பெற்றது.
கார்த்திக் சுப்புராஜின் பேட்ட: பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு எதிராக வெயிட்டான வில்லனாக நாவஸுதின் சித்திக் நடித்திருப்பார். ஆரம்பத்தில் சோப்ளாங்கியாக வரும் வில்லன், பின்னர் அலட்டல் இல்லாமல் மேம்போக்காக நடித்து இருப்பார். பேட்ட படம் வெளியான போதே, இந்த படத்தில் வில்லன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், பாலிவுட் நடிப்பின் அசுரன் என பெயர் எடுத்தவரை கார்த்திக் சுப்புராஜ், சரியாக பயன்படுத்தவில்லை என்று பேச்சுக்கள் எழுந்தன.
பேட்ட வில்லன் வருத்தம்: இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நவாசுதீன் சித்திக், பேட்ட படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில், நான் ரஜினிகாந்த் உடன் பேட்ட படத்தில் நடித்த பிறகு, மிகுந்த குற்ற உணர்ச்சியுடன் இருந்தேன். அதற்குகாரணம் என்னவென்றால், நான் அந்த படத்தில் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியாத ஒரு விஷயமாக இருந்தது. பணத்திற்காக நடித்ததாக எனக்கு எண்ணம் தோன்றியது. நான் அங்கு வெறுமனே வாயசைத்துக் கொண்டுதான் இருந்தேன். மேலும் எனக்கு அங்கு நடந்த பல விஷயங்கள் சரியாக புரியவில்லை. நான் அவர்களை முட்டாளாக ஆக்கிவிட்டேன். இந்த விஷயம் எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியாக இருந்தது என்று நவாசுதீன் சித்திக் அந்த பேட்டியில் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
பேட்ட திரைப்படம்: 2019ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சசிக்குமார், இயக்குநர் மகேந்திரன், குருசோசமசுந்தரம், ஆடுகளம் நரேன், பாபி சிம்ஹா, சனத், மேக்னா ஆகாஷ் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். 90ஸ் கடைசி காலகட்டத்தில் டாப் ஹீரோயினாக வலம் வந்த சிம்ரன், 2கே ஆரம்ப காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த த்ரிஷா ஆகியோர் ரஜினிக்கு முதல் முறையாக ஜோடியாக இப்படத்தில் நடித்திருந்தார்கள்.


Click it and Unblock the Notifications











