ராஜமௌலி மேல கோபமெல்லாம் இல்லீங்க... சந்தேகத்தை தீர்த்து வைத்த ஆலியா!
மும்பை : சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் குறைவான காட்சிகளிலேயே ஆலியா பட் காணப்பட்டார். இதனால் அவர் ராஜமௌலி மீது ஆத்திரத்தில் உள்ளதாகவும் அதனால் இன்ஸ்டாகிராமில் படத்தின் பதிவுகளை நீக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது இதற்கான விளக்கத்தை ஆலியா பட் அளித்துள்ளார்.

ஆர்ஆர்ஆர் படம்
சர்வதேச அளவில் கடந்த வாரத்தில் ஆர்ஆர்ஆர் படம் ரிலீசானது. தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியான நிலையில், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்தின் பிரம்மாண்டம் அனைவரையும் வாயடைக்க செய்துள்ளது.

சிறப்பான காட்சி அமைப்புகள்
படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இருவருக்குமே படத்தில் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை இருவருமே சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர். சுதந்திர போராட்ட காலத்தை கண்முன்னே கொண்டுவரும் காட்சி அமைப்புகள் படத்தில் சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட பட்ஜெட்
படம் அதிகமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட போதிலும் ரிலீசுக்கு முன்னதாகவே தயாரிப்பாளர்களுக்கு மும்மடங்கு லாபத்தை பெற்றுத் தந்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் திரையரங்குகளில் ரசிகர்களின் சிறப்பான ஆதரவுடன் தொடர்ந்து ஓடி வருகிறது.

ஆலியாவை வீணடித்த ராஜமௌலி?
படத்தில் நாயகியாக ஆலியா பட் மற்றும் ஷ்ரேயா சரண் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்கள் இருவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்திருந்தனர். ஆனால் பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினான ஆலியா பட்டை இந்தப் படத்தில் ராஜமௌலி வீணடித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

குறைவான காட்சிகளில் ஆலியா
அவருக்கு படத்தில் மிகவும் குறைவான காட்சிகளே இருந்தன. இதையடுத்து அவர் ராஜமௌலி மீது மிகுந்த ஆத்திரத்தில் உள்ளதாகவும் அதனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஆர்ஆர்ஆர் குறித்த பதிவுகளை அவர் நீக்கிவிட்டதாகவும் இரு தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இதற்கேற்றாற்போல அவர் ஆர்ஆர்ஆர் குறித்த பதிவுகளை நீக்கியிருந்தார்.

வதந்திகளுக்கு ஆலியா முற்றுப்புள்ளி
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு ஆலியா பட் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தான் எப்போதுமே தனது பக்கத்தில் இருக்கும் பழைய பதிவுகளை நீக்குவது வழக்கம் என்றும் அதையொட்டியே ஆர்ஆர்ஆர் பதிவுகளை நீக்கியதாக தெரிவித்துள்ளார்.

ராஜமௌலியுடன் நடித்தது பெருமை
ராஜமௌலி படத்தில் தான் நடித்ததை மிகவும் பெருமையாக நினைப்பதாகவும் படத்தில் தான் நடித்தது மிகச்சிறந்த அனுபவமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 4 ஆண்டுகள் கடின உழைப்பிற்கு பிறகு படம் வெளியாகியுள்ள இந்த நேரத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தான் இந்த பதிவை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











