Rajinikanth: மராத்தி தலைவா.. ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்தில் சர்ச்சையை இழுத்துவிட்ட கஜோல்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று அதாவது டிசம்பர் 12ஆம் தேதி தனது 74வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகின்றார். படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், படப்பிடிப்புத் தளத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடினார். படக்குழு தரப்பில் இருந்து சிகிடு வைஃப் என்ற பாடலின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டனர். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பாலிவுட் நடிகை கஜோல், அவரை மராத்தி எனக் குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது 74வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அடுத்த ஆண்டு தமிழ் சினிமாவில் இவர் தனது 50வது ஆண்டினைக் கொண்டாடவுள்ளார். இதற்காக சிறப்பு விழா நடத்த அவரது ரசிகர்கள் திட்டமிட்டு வருகின்றனர். நேற்று அவரது பிறந்த நாள் என்பதால் அவரது வீட்டு வாசலில் காத்திருந்த ரசிகர்கள், ரஜினிகாந்த் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கின்றார் எனத் தெரிந்து கொண்டு மிகவும் கவலை அடைந்தனர். மேலும் அவரது வீட்டு சுவரில் ஒட்டப்பட்டிருந்த பிறந்த நாள் வாழ்த்து போஸ்டரில் ரஜினிகாந்த் படத்திற்கு முத்தமிட்டு தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

தனது 50வது ஆண்டில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யவேண்டும் என சூப்பர் ஸ்டார் திட்டமிட்டுள்ளதாகவும், கூலி படத்தினையும் , ஜெயிலர் 2 படத்தினையும் அடுத்த ஆண்டு வெளியிட்டே ஆகவேண்டும் என குறிக்கோளோடு அவர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால்தான் தனது பிறந்த நாளுக்கு வீட்டிற்குக் கூட வராமல், படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டு இருந்துள்ளார்.
ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பிறந்த நாள் என்றால் சொல்லவேண்டாம். தமிழ் சினிமா தொடங்கி, பாலிவுட் வரை பலரும் வாழ்த்துவார்கள். அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறாத பிரபலங்கள்தான் குறைவு. சூப்பர் ஸ்டாருக்கும் விஜய்க்கும் தொழிலில் சரியான சண்டை நடக்கின்றது என பேச்சுகள் இப்போதும் உலா வரத்தான் செய்கின்றது. ஆனால் விஜய்யும் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
கஜோல்: இப்படியான நிலையில் பாலிவுட் நடிகை கஜோல், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்தினை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் தெரிவித்தார். அதில் அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து,” ஹேப்பி பர்த் டே ஒன் அண்ட் ஒன்லி மராத்தி தலைவா! உங்களுக்கு எதிர்வரும் அனைத்து ஆண்டுகளும் சிறப்பான ஆண்டுகளாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் அவர் ரஜினிகாந்த்தினை மராத்தி தலைவா எனக் குறிப்பிட்டுள்ளது, பலரது மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
மராத்தி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பூர்வீகம் மகாராஷ்ட்ரா மாநிலம்தான் என்றாலும், அவரது குடும்பம் பிழைப்புக்காக கர்நாடகாவில் தஞ்சம் அடைந்தனர். தனக்கு இருந்த சினிமா ஆர்வத்தினால், ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில், நடிகராக அறிமுகமாக இன்றைக்கு ஜாம்பவானாகத் திகழ்கின்றார். காவிரி நீர் பிரச்னை வரும்போதுகூட அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆதரவாகவே இருந்தார். இதுமட்டும் இல்லாமல், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது, தமிழ்நாடு அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் இடையில் சுமூகமான உறவு நீடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் ரஜினிகாந்த். தன்னை தமிழனாகவே அடையாளப்படுத்திவரும், அவரை மராத்தி எனக் குறிப்பிட்டு பாலிவுட் நடிகை கஜோல் பிறந்த நாள் வாழ்த்து கூறியது பேசுபொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











