Mamta kulkarni: விஜய் பட நடிகை கும்பமேளாவில் சந்நியாசி அவதாரம் எடுத்தார்.. ஏன் இந்த திடீர் முடிவு!
சென்னை: பாலிவுட் நடிகையான மம்தா குல்கர்னி 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பிய நிலையில் மகா கும்பமேளாவில் சந்நியாசம் பெற்றார்.கழுத்தில் ருத்ராட்சம் மற்றும் காவி உடை அணிந்த மம்தா குல்கர்னி, தனது பெயரை மாற்றிக்கொண்டதாகவும், இது அனைத்தும் கடவுளின் விருப்பம், அந்த விருப்பத்தை நான் தற்போது நிறைவேற்றி இருக்கிறேன் என்றார்.
90 காலகட்டத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை மம்தா குல்கர்னி, ஷாருக்கான், சல்மான்கான், அஜய் தேவ்கன், அமீர் கான் என பல முன்னணி நடிகர் படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் நடித்த, கரண் அர்ஜுன், சைனா கேட், ஆஷிக் அவரா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. தமிழில் இவர், விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் இயக்கிய நண்பர்கள் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில், நீரஜ், மம்தா குல்கர்னி, விவேக், நாகேஷ், மனோரமா, சங்கீதா, குமரிமுத்து, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் நடித்த இப்படத்தை விஜய் தயாரித்து இருந்தார்.

மம்தா குல்கர்னி: இப்படி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து வந்த மம்தா குல்கர்னி திடீரென நாட்டை விட்டு வெளியேறினார். மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் 2,000 கோடி ரூபாய் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், மம்தா குல்கர்னியின் பெயரும் அவரது நண்பர் விக்கி கோஸ்வாமியின் பெயரும் சேர்க்கப்பட்டது. இதனால், மம்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், வழக்கில் கைது ஆகாமல் இருப்பதற்காக வெளிநாட்டில் மம்தா குல்கர்னி தஞ்சம் அடைந்து இருந்தார். 25 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், அண்மையில் மம்தா குல்கர்னி மீதான வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, 25 ஆண்டுகள் கழித்து கடந்த டிசம்பர் மாதம் மம்தா குல்கர்னி நாடு திரும்பினார்.
இது கடவுளின் முடிவு: ஒரு காலத்தில் திரைத்துறையில் பிரபலமான நடிகையாக இருந்த மம்தா குல்கர்னி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் சந்நியாசி ஆகி உள்ளார். கின்னர் அகாடாவின் மகா மண்டலேஷ்வர் பட்டத்தை ஏற்றுக்கொண்ட அவர், மம்தா குல்கர்னி என்ற பெயரை மாற்றி மம்தா நந்த கிரி என வைத்துள்ளார். இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பதை விளக்கி உள்ள மம்தா, இது அனைத்தும் கடவுளின் விருப்பம், அந்த விருப்பத்தை நான் தற்போது நிறைவேற்றி இருக்கிறேன். நேற்று எனக்கு மகா மண்டலேஷ்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. இதை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று ஒரு நாள் மட்டுமே யோசித்தேன். கின்னர் அகாடாவில் எந்த கட்டுப்பாடும் இல்லை, இங்கு சுதந்திரமாக மத சடங்குகளை செய்யலாம் என்றதும் இந்த முடிவை எடுத்தேன்.

காவி உடை, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் வலம் வரும் மம்தா, பிரயாக்ராஜில் சடங்குகளை முடித்த பிறகு, காசி விஸ்வநாதர் கோயிலின் தரிசனத்திற்காக வாரணாசிக்குச் செல்கிறார். பின் தை அமாவாசை தினத்தன்று தனது பெற்றோருக்கு தர்பணம் செய்ய உள்ளார். அதன் பிறகு அயோத்தி செல்ல இருப்பதாகவும் இந்த 10 நாட்களும் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.


Click it and Unblock the Notifications











