போதைப் பொருள் வழக்கு.. கரண் ஜோஹர் நிறுவன முன்னாள் நிர்வாகத் தயாரிப்பாளர் திடீர் கைது!
மும்பை: போதைப் பொருள் வழக்கில் மேலும் ஒருவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் சுஷாந்த் சிங் மரணமடைந்ததை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு ஏற்பட்டது.
சுஷாந்தின் தந்தை கே.கே.சிங், பாட்னா போலீசில் புகார் அளித்தார். அதில், சுஷாந்த் சிங்கின் காதலி, நடிகை ரியா சக்கரவர்த்தி மீது குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

அமலாக்கத்துறை
நடிகை ரியா, சுஷாந்தை தற்கொலைக்குத் தூண்டியதாகவும் பண மோசடி செய்ததாகவும் கூறியிருந்தார். பண மோசடி மற்றும் பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை, விசாரணை நடத்தியது. அப்போது நடிகை ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

போதைப் பொருள்
இதுபற்றி போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து நடிகை ரியா, அவர் சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி, சாமுவேல் மிரண்டா உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தீபிகா படுகோன்
இந்த வழக்கில் நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரகுல் பிரீத் சிங்கிடம் போதைத் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். நடிகை தீபிகா படுகோன் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.

தர்மா புரொடக்ஷன்ஸ்
அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து நடிகை சாரா அலிகான் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையே பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில், இதற்கு முன் எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளராக இருந்த ஷிதிஜ் பிரசாத் (Kshitij Prasad) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வீட்டில் கஞ்சா
கடந்த 2 நாட்களாக இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், அவரை கைது செய்துள்ளனர். அவர் பல முறை, போதைப் பொருட்களை ஏற்பாடு செய்து வழங்கி இருக்கிறார் என்று தெரியவந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வீட்டில் இருந்து கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











