அரை இறுதிப் போட்டியை நேரில் பார்க்கும் பாலிவுட்-ஷூட்டிங் ரத்து

இந்திய அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் மொஹாலிக்குப் படையெடுக்கின்றனர்.
ஆமிர்கான், அவரது மனைவி கிரண் ராவ், ப்ரீத்தி ஜிந்தா, சுனில்ஷெட்டி, ராகுல் போஸ், பாடகர் மிகா சிங் உள்ளிட்டோர் நேரடியாக போட்டியைக் காணவுள்ளனர். அதேபோல ஷாருக் கான், அகஷய் குமார், இம்ரான் கான், தீபிகா படுகோன் ஆகியோர் டிவிகளில் பார்த்து ரசிக்கவுள்ளனர். மேலும் வீடுகளில் விருந்துக்கு ஏற்பாடு செய்து உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் போட்டியை ரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.
ஆமிர்கான் போட்டி குறித்துக் கூறுகையில், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளேன். இந்தியாவை இறுதிப் போட்டியில் காண பெரும் ஆவலுடன் இருக்கிறேன். எனது இயக்கும் ஒரு கிரிக்கெட் வெறியர் என்பதால் படப்பிடிப்பைக் கூட ரத்து செய்து விட்டார். எனவே மொஹாலியில் போய் நேரடியாக பார்த்து ரசிக்கப் போகிறேன் என்றார்.
தீபிகா படுகோன், சித்ராங்கதா சிங், ஜான் ஆப்ரகாம் ஆகியோர் தற்போது லண்டனில் உள்ளனர். தங்களது படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு டிவியில் இருந்தபடி போட்டியை ரசிக்க அவர்கள் தயாராகி விட்டனர்.
சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தனது வீட்டையே குட்டி ஸ்டேடியமாக்கி விட்டார். தனது பாலிவுட் நண்பர்கள் அத்தனை பேரையும் வீட்டுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவி கெளரி சிறப்பு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார். நண்பர்கள் புடை சூழ தனது குடும்பத்தினருடன் போட்டியை ரசித்துப் பார்க்கவுள்ளார் ஷாருக்.
மொத்தத்தில் பாலிவுட்டில் இன்று பெரும்பாலான படப்பிடிப்புகளுக்கு லீவு விட்டு விட்டனர். போட்டி தொடங்கி முடியும் வரை பாலிவுட் பிரபலங்கள் யாரையும் எங்குமே பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











