அவதூறு பரப்பிய அர்னாப்.. ரிபப்ளிக், டைம்ஸ் நவ் சேனல்களுக்கு எதிராக 34 பாலிவுட் தயாரிப்பாளர் வழக்கு!
மும்பை: ரிபப்ளிக் மற்றும் டைம்ஸ் நவ் சேனல்களுக்கு எதிராக 34 திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களும் 4 பாலிவுட் சங்கங்களும் வழக்குத் தொடர்ந்துள்ளன.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு பாலிவுட் மாஃபியாதான் காரணம் என்றும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் பரபரப்பு புகார்கள் கூறப்பட்டன.

பாலிவுட்டுக்கு எதிராக
இந்நிலையில் போதைப் பொருள் வழக்கில் நடிகை ரியா சக்கரவர்த்தி, அவர் சகோதரர் சோவிக் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். இதையடுத்து, ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ் உள்பட சில செய்தி சேனல்கள் இந்தி திரையுலகுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தன.

ஒட்டுமொத்த பாலிவுட்
பாலிவுட்டை சாக்கடை என்றும், அழுக்கு, போதைப் பொருள் பயன்படுத்தும் இடம் என்று சரமாரியாகத் தாக்கின. இது, பாலிவுட் பற்றி மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என்று அப்போதே பல பாலிவுட் பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், சேனல்கள் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் அப்படி தவறாகப் பார்க்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.
அர்னாப் கோஸ்வாமி
இந்நிலையில், பாலிவுட்டை இழிவுபடுத்தும் விதமாக செய்திகளை ஒளிபரப்பிய, ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, செய்தியாளர் பிரதீப் பண்டாரி மற்றும் டைம்ஸ் நவ் சேனல் ஆசிரியர் ராகுல் சிவசங்கர், செய்தியாளர் நவிகா குமார் ஆகியோருக்கு எதிராக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அஜய் தேவ்கன்
ஷாரூக் கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட், ஆமிர்கானின் ஆமிர் கான் புரொடக்ஷன்ஸ், அஜய் தேவ்கனின் அஜய்தேவ்கன் ஃபிலிம்ஸ், அக்ஷய் குமாரின் கேப் ஆப் குட் பிலிம்ஸ், கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ், யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் உள்பட 34 தயாரிப்பு நிறுவனங்களும் நான்கு பாலிவுட் திரைப்பட சங்கங்களும் இணைந்து இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளன.

அவதூறு பிரசாரம்
இந்த சேனல்கள், இந்தி திரையுலகுக்கு எதிராக ஒளிபரப்பிய அவதூறு விஷயங்களைத் திரும்ப பெற வேண்டும் என்றும் கேபிள் டெலிவிஷன் நேட்வொர்க் விதிகளில் இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான வரைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் இந்த அவதூறு பிரச்சாரத்தால் பாலிவுட்டைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











