ஷாருக்கானை அடுத்து நடிகர் போமன் இரானியை மிரட்டிய தாதா ரவி பூஜாரி
மும்பை: நிழல் உலக தாதா ரவி பூஜாரி பாலிவுட் நடிகர் போமன் இரானிக்கு மிரட்டல் விடுத்ததை அடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருக்கும் நிழல் உலக தாதாவான ரவி பூஜாரி மிரட்டல் விடுப்பது அதிகரித்து வருகிறது. அவர் கட்டுமானத் தொழில் செய்பவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்களுக்கு போன் மூலம் மிரட்டல் விடுப்பதற்கு பெயர் போனவர்.
அப்படி அவர் பிரபல தொழில் அதிபர் நுஸ்லி வாடியாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிரட்டல் விடுத்தார்.

ப்ரீத்தி ஜிந்தா
பாலிவுட் நடிகை ப்ரீ்த்தி ஜிந்தா தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது பாலியல் புகார் தெரிவித்தார். அப்போது வாடியா குழும தலைவர் நுஸ்லி வாடியாவுக்கு போன் செய்த மும்பை நிழல் உலக தாதா ரவி பூஜாரி ப்ரீத்திக்கு பிரச்சனை செய்யாமல் இருக்க வேண்டும், இல்லை என்றால் அதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மிரட்டல் விடுத்ததாக அவர் போலீசில் புகார் தெரிவித்தார்.

ஷாருக்கான்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவி பூஜாரி நடிகர் ஷாருக்கானுக்கு மிரட்டல் விடுத்தார். தயாரிப்பாளர் மொரானி விஷயத்தில் தலையிடாமல் இருக்குமாறு அவர் ஷாருக்கை எச்சரித்தார். இதையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

போமன் இரானி
ஷாருக்கான் தற்போது நடித்த வரும் ஹேப்பி நியூ இயர் படத்தில் அவருடன் நடிக்கும் பிரபல நடிகர் போமன் இரானிக்கு ரவி பூஜாரி தற்போது போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டலையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மொரானி
முன்னதாக கடந்த 23ம் தேதி மும்பை ஜுஹு பகுதியில் உள்ள இந்தி பட தயாரிப்பாளர் அலி மொரானியின் வீட்டுக்கு வெளியே 3 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.


Click it and Unblock the Notifications











