Bonda Mani: வடிவேலுவிடம் உதவி கேட்ட போண்டா மணி... விவேக் இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா..?
சென்னை: காமெடி நடிகர் போண்டா மணி நேற்று இரவு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 60. இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிகிச்சை எடுத்து வந்தார். அவருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் உதவி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
வடிவேலுவிடம் உதவி கேட்ட போண்டா மணி
தமிழில் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானவர் போண்டா மணி. முக்கியமாக வடிவேலுவுடன் அவர் நடித்திருந்த பல காமெடி காட்சிகள் இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் ஆகும். ஒரு குளத்தின் அருகே நின்றுகொண்டிருக்கும் வடிவேலுவை, தண்ணீருக்கு அடியில் இருந்து திடீரென வந்து குழப்பிவிட்டு போவார் போண்டா மணி. "அவன் உன்கிட்ட என்ன சொன்னான்னு கேப்பாங்க?, ஒன்னுமே சொல்லிறாதீய... அடிச்சுக் கூட கேப்பாய்ங்க... அப்பயும் ஒன்னும் சொல்லிறாதீய" என சொல்லிவிட்டு காணாமல் போய்விடுவார்.

இப்படி இன்னும் இதுபோல பல காமெடிகளில் நடித்து சிரிக்க வைத்த போண்டா மணி, இன்று நம்முடன் இல்லை. நேற்று இரவு வீட்டில் மயங்கி விழுந்த போண்டா மணியை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர் கேதீஸ்வரன் என்ற போண்டா மணி.
சினிமாவில் வாய்ப்புத் தேடிய அவருக்கு கே. பாக்யராஜ் தான் இயக்கிய 'பவுனு பவுனுதான்' படத்தில் நடிக்க வைத்தார். "கேதீஸ்வரன் என்கிற பெயர் சினிமாவுக்கு சரியா வராது. நான் கவுண்டமணி நீ போண்டா மணி" என்று கவுண்டமணி தான் அவரது பெயரை மாற்றியுள்ளார். பின்னர் வடிவேலு, விவேக் ஆகியோருடன் காமெடியனாக வலம் வந்த போண்டா மணி, இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
போண்டா மணி கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அவரது 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் போண்டா மணி திரை பிரபலங்கள் தனக்கு உதவ வேண்டும் என பேட்டிக் கொடுத்திருந்தார். ஒருமுறை வடிவேலுவின் பெயரை குறிப்பிட்டே "அண்ணன் தனக்கு உதவினால் நன்றாக இருக்கும்" என பேசியிருந்தார். அதற்கு வடிவேலுவும் கண்டிப்பாக போண்டா மணிக்கு உதவுவேன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், வடிவேலு சொன்னபடி உதவி செய்யவில்லை என சொல்லப்படுகிறது. அதேநேரம் நடிகர் பார்த்திபன், மறைந்த மனோபாலா உள்ளிட்ட மேலும் சிலர் உதவி செய்து வந்தனர். முன்னதாக அதே பேட்டியில் நடிகர் விவேக்கை குறிப்பிட்டு கண் கலங்கியிருந்தார் போண்டா மணி. விவேக் சார் இருந்திருந்தா எனக்கு இந்த நிலைமையே வந்துருக்காது. அவரே ஓடி வந்து உதவி செஞ்சிருப்பார். விவேக் சார் தவிர வேற யாரிடமும் உதவி கேட்டிருக்க மாட்டேன் என போண்டா மணி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











