மீண்டும் ஒரு இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்யும் போனி கபூர்
சென்னை: அஜித் நடிப்பில் தயாராகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மற்றொரு இந்தி படத்தையும் தமிழில் ரீமேக் செய்யவுள்ளார் போனி கபூர்.
இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்தபோது அஜித்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஸ்ரீதேவியின் ஆசையை அவரது மறைவுக்கு பின் நிறைவேற்ற நினைத்த போனி கபூர், அஜித் நடிப்பில் 2 படங்களை தயாரிக்கவுள்ளார். முதல் படம் இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே. நேர்கொண்ட பார்வை என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் ஒரு இந்தி படத்தை ரீமேக் செய்ய உள்ளார் போனி கபூர். கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பதாய் ஹோ திரைப்படம் தான் அது. இம்முறை தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளின் ரீமேக் உரிமையையும் வாங்கியுள்ளார் போனி கபூர்.

தன்னுடைய காதலை வீட்டில் சொல்ல வரும் போது, 50 வயதை கடந்த தாய் கருவுற்றிருப்பதாக தெரிய வந்ததால், அவனது திருமணத்தில் ஏற்படும் குழப்பமும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த செய்தியை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதே பதாய் ஹோ படத்தின் கதை. கதை சிக்கலாக இருந்தாலும், நகைச்சுவையாக கொண்டு சென்ற விதம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தமிழ்படம் தயாரிக்க வந்த போனி கபூர், தற்போது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கால் பதிக்கவுள்ளார். அவர் தேர்வு செய்யும் படங்களில் இருந்தே,வெற்றிப்படங்களை தயாரிக்க வேண்டும் என்ற அவரது உறுதி தெரிகிறது.


Click it and Unblock the Notifications











