காதல் மனைவி ஸ்ரீதேவியின் நினைவு நாளில் வலிமையை ரிலீஸ் செய்த போனி கபூர்
சென்னை : தனது காதல் மனைவியும், மறைந்த முன்னணி நடிகையுமான ஸ்ரீதேவியின் நினைவாகவே அவரது நினைவு நாளில் அஜித்தின் வலிமை படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். ஸ்ரீதேவி மீதான காதல் காரணமாகவே அவருக்கு இந்த படத்தை டெடிகேட் செய்துள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு இந்திய சினிமாவையே கலக்கியவர் ஸ்ரீதேவி. பலரின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவரை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தீவிரமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஜான்வி கபூர் ஏற்கனவே பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். விரைவில் குஷி கபூரும் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.

போனி கபூரை கவர்ந்த ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி நடித்த ஒரு தமிழ் படத்தை பார்த்து விட்டு, தனது அடுத்த படத்தில் ஸ்ரீதேவியை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என முயற்சி செய்துள்ளார் போனி கபூர். அறிமுகமில்லாதவர்களிடம் பேச தயங்கும் பழக்கம் கொண்ட ஸ்ரீதேவி, இந்தியும் ஆங்கலமும் கலந்து, வார்த்தைகளை அளந்து பேசியது போனி கபூரை மிகவும் கவர்ந்தது. ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக இருந்த போதிலும், முதல் சந்திப்பிலேயே போனி கபூரை கவர்ந்தார் ஸ்ரீதேவி. பெரும் தொகை கொடுத்து தனது படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைத்தார் போனி கபூர்.

காதல் வந்தது எப்படி
முதல் படம் நடிக்கும் போது இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டு, பிறகு அது காதலாக மலர்ந்தது. ஸ்ரீதேவி ஷுட்டிங்கில் ஓய்வெடுப்பதற்காக தனி வேன், அவருடனேயே இருந்து கவனித்து கொள்ள நம்பிக்கையான ஆள் என பலவற்றையும் ஸ்ரீதேவிக்காக செய்து கொடுத்தார் போனி கபூர். ஸ்ரீதேவி மீது தீராத, அதீத காதல் கொண்ட போனி கபூர் அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிப்பிற்கு பிரேக் விட்ட ஸ்ரீதேவி, பிறகு மீண்டும் நடிப்பை தொடர்ந்தார்.

அஜித் உடனான பழக்கம்
ஸ்ரீதேவி நீண்ட இடைவேளைக்கு பிறகு 2011 ல் நடிக்க வந்த இங்கிலீஷ் விங்லீஷ் படத்தில், விமானத்தில் உடன் வரும் பயணி ரோலில் முதலில் அமிதாப் பச்சனை தான் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார்கள். ஆனால் தயாரிப்பாளரோ, அந்த ரோலில் அஜித்தை நடிக்க வைக்க நினைத்தார். 2001 ம் ஆண்டு அசோகா படத்திற்கு பிறகு பாலிவுட் படங்களில் நடிக்காமல் இருந்த அஜித், தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதால் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடித்தார். இந்த படத்தின் போது தான் ஸ்ரீதேவி - அஜித் இடையே பழக்கம் ஏற்பட்டது.

அஜித்தை தேர்வு செய்தது ஏன்
அஜித் நடந்து கொண்ட விதம் ஸ்ரீதேவியை மிகவும் கவர்ந்ததால், தனக்காக தங்களின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க வேண்டும் என அஜித்திடம் கோரிக்கை வைத்தார் ஸ்ரீதேவி. இது தொடர்பாக போனி கபூரும், அஜித்திடம் பேசி உள்ளார். அப்படி ஸ்ரீதேவி ஆசைப்பட்ட காரணத்திற்காக அஜித்தை வைத்து எடுக்கப்பட்டது தான், பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை. ஆனால் இந்த படம் துவங்கப்படுவதற்கு முன்பே ஸ்ரீதேவி உயிரிழந்து விட்டார்.

மறைவிற்கு பின் நிறைவேறிய ஸ்ரீதேவியின் ஆசை
2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துபாயில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த போது தான் தங்கியிருந்த ஓட்டல் அறையின் பாத் டப்பில் ஸ்ரீதேவி இறந்து கிடந்தார். திடீர் மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காகவே அதே ஆண்டு டிசம்பர் மாதம் நேர்கொண்ட பார்வை படம் பூஜையுடன் துவங்கப்பட்டது. இந்த படம் வெற்றி அடைந்ததால், வலிமை படத்திலும் அஜித்தையே புக் செய்தார் போனி கபூர்.

பிப்ரவரி 24 ரிலீசிற்கு இதுதான் காரணம்
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, பிறகு தள்ளிவைக்கப்பட்ட படங்கள் அனைத்துமே மார்ச் மாதத்தை தான் ரிலீசிற்காக தேர்வு செய்தன. ஆனால் போனி கபூர் மட்டும் தான் பிப்ரவரி மாதத்தை தேர்வு செய்தார். மறைந்த தனது காதல் மனைவி ஸ்ரீதேவிக்கு அர்ப்பணம் செய்வதற்காகவே அவரது நினைவு தினம், வியாழக்கிழமை என அனைத்தும் சேர்ந்து வருவதால் பிப்ரவரி 24 ம் தேதியை வலிமை படத்தின் ரிலீசிற்காக தேர்வு செய்தார் போனி கபூர்.


Click it and Unblock the Notifications











