Boney Kapoor: அஜித் பட தயாரிப்பாளரின் காரில் சிக்கிய வெள்ளிப் பொருட்கள்..? இந்த நேரத்தில் இப்படியா?
பெங்களூரு: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர், திரைப்படங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அஜித், உதயநிதி ஆகியோரின் படங்களை தயாரித்து தமிழ் ரசிகர்களிடமும் ரொம்பவே பிரபலமானார்.
சமீபத்தில் கூட நடிகை மீனாவின் 'மீனா 40' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், அவரது காரில் இருந்து வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தியில் திரைப்படங்கள் தயாரித்து வருகிறார். அதேபோல், தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். மேலும், உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி, ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படங்களும் போனி கபூர் தயாரிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களாக தமிழிலும் கவனம் செலுத்தி வந்த போனி கபூர், தற்போது பாலிவுட்டில் மட்டும் படங்கள் தயாரித்து வருகிறார். அதன்படி அஜய் தேவ்கன் நடிக்கும் மைதான் படம் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிறது. இந்நிலையில், அவரது காரில் இருந்து வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் ஒன்றை, தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அப்போது அந்த காரில் 66 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் மதிப்பு ரூ.33 லட்சம் என தெரிவித்துள்ளனர்.
வெள்ளி தட்டுகள், ஸ்பூன், கின்னங்கள், டம்ளர்கள் போன்ற மேலும் பல வெள்ளிப் பொருட்கள் இருந்துள்ளன. இதனிடையே இந்த காரை ஹரிசிங் என்பவர் ஓட்டி வந்துள்ளார், அவருடன் சுல்தான் கான் என்பவரும் பயணித்துள்ளார். அவர்களிடம் வெள்ளிப் பொருட்களுக்கான உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், அந்த கார் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனமான பேவியூ புரொஜெக்ட் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.

கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அங்கு போனி கபூரின் காரில் இருந்து வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தேர்தல் அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











