நாளை விஜய் அரசியல் மாநாடு.. சூர்யா அரசியலுக்கு வரணுமாம்..கங்குவா ஆடியோ லான்ச்சில் பற்றிய நெருப்பு
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சிவா இயக்கியிருக்கும் அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சம்பாதித்திருக்கிறது. முக்கியமாக சூர்யாவின் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்தச் சூழலில் நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் கங்குவா ஆடியோ லான்ச்சில் பேசியிருக்கும் விஷயம் புதிய பேசுபொருளாகியிருக்கிறது.
சூர்யாவின் நடிப்பில் உருவாகியிருக்கிறது கங்குவா திரைப்படம். சிவா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருக்கிறது. முக்கியமாக சூர்யாவின் நடிப்பில் படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆவதால் இந்தப் படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

கங்குவா கதை: கங்குவா படத்தை சிவா அறிவித்தபோது இது எந்த மாதிரியான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தது. முதலில் இது பீரியட் ஜானரில் உருவாகும் என்று தகவல் வெளியானது. ஆனால் இது முழுக்க முழுக்க பீரியட் ஜானர் மட்டுமில்லை சமகாலத்தில் நடக்கும் கதையாகத்தான் இது இருக்கும் என்று உறுதியானது. இதனால் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் சிவா இந்தப் படத்தில் தன்னை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது.
பட்டையை கிளப்பிய ட்ரெய்லர்: முதலில் படத்திலிருந்து வெளியான க்ளிம்ப்ஸ் காட்சிகள் கலவையான விமர்சனத்தையே பெற்றன. அதனையடுத்து வெளியான படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முக்கியமாக படமானது இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும்; படத்தில் கார்த்தி முக்கியமான ரோலில் நடித்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனாலும் படத்தின் மீது ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.
இசை வெளியீட்டு விழா: படமானது முதலில் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் வேட்டையன் வெளியானதால் பட ரிலீஸ் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது. சூழல் இப்படி இருக்க இன்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் படக்குழுவினர் மற்றும் மற்ற நடிகர்கள் கலந்துகொண்டார்கள். அந்தவகையில் நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் பேசுகையில், " ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை வழிநடத்த வேண்டும்.. உங்களை மாதிரி வழிநடத்த வேண்டும். உதவி, தர்மம் செய்ய இப்போவே சொல்லி கொடுக்கணும்.

சூர்யா அரசியலுக்கு வாங்க: அனைவருக்கும் படிப்பை கொடுத்துவிட வேண்டும்.. அதற்கு பிறகுதான் அரசியலுக்கு வரவேண்டும். ஒரு தலைவன் நடிகனாக, எழுத்தாளனாக, டாக்டராக இருக்கலாம். ஆனால் தலைவன் முகம் ரசிகர்களை முட்டாளாக வைத்திருப்பதைவிட அறிவாளியாக வைத்திருக்க வேண்டும். ரசிகனை படிக்க வைக்க வேண்டும். அவனுக்கு அறிவை வளர்க்கணும் பிறகுதான் அரசியலுக்கு வர வேண்டும். அப்படி பார்த்தால் நீங்கள் அரசியலுக்கு வரணும்.. கமலுக்கு பிறகு நுணுக்கமான நடிகன் சூர்யாதான். நிறைய திருப்திகரமான படங்களை கொடுத்துவிட்ட பிறகு அரசியலுக்கு வரவேண்டும்" என்று குறிப்பிட்டார்.
தவெக: போஸ் வெங்கட்டின் இந்தப் பேச்சு புதிய பேசுபொருளாகியிருக்கிறது. ஏனெனில் நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை விக்கிரவாண்டியில் நடக்கவிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் போஸ் வெங்கட் பேசியிருப்பது மறைமுகமாக விஜய்யை தாக்கித்தான் பேசினார் என்றும்; அசால்ட்டாக விஜய் ரசிகர்களுக்கும், சூர்யா ரசிகர்களுக்கும் சண்டையை இழுத்துவிட்டாரே என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











