Mysskin: இளையராஜா குறித்து மிஷ்கின் பேச்சில் என்ன தப்பு இருக்கு.. பாட்டில் ராதா ஹீரோ சப்போர்ட்!
சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் உண்டாக்கியுள்ள விஷயம் என்றால் அது, பாட்டில் ராதா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகரும் இயக்குநருமான மிஷ்கின் பேசிய பேச்சுதான். அதுவும் ஆபாச வார்த்தைகளைப் தொடர்ந்து பயன்படுத்திப் பேசினார், மேலும் இளையராஜா குறித்து பேசுகையில், ஒருமையில் பேசினார். இதனால் அவரது பேச்சுக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது, பாட்டில் ராதா படத்தின் நாயகன் குரு சோமசுந்தம் செய்தியாளர் சந்திப்பில், மிஷ்கினின் இளையராஜா குறித்த பேச்சுக்கு ஆதரவான கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பாட்டில் ராதா. இந்தப் படம் போதைப் பழக்கத்திற்கு அடிமைகளாக உள்ள நோயாளிகளின் வாழ்க்கை குறித்தும், அவர்கள் அதிலிருந்து மீண்டு வருவது குறித்தும் பேசுகின்றது. படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 18ஆம் தேதி, சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குநருமான மிஷ்கினின் பேச்சு, சர்ச்சையாக மாறியதால், கடந்த சில நாட்களாக இது தொடர்பாக, பலரும் பேசியும், கண்டித்தும் வருகின்றனர்.

குறிப்பாக, ப்ளூ சட்டை மாறன், நடிகரும் ஒளிப்பதிவாளருமான அருள் தாஸ், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலரும் மிஷ்கினின் பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாட்டில் ராதா படத்தின் நாயகன், குரு சோமசுந்தரத்திடம் இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதில் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
இளையராஜா : அதாவது இது தொடர்பாக அவர் பதில் அளிக்கும்போது, " இதனை இரண்டு விதமாக பார்க்கின்றேன். இதில் சரியும் உள்ளது, தவறும் உள்ளது. சில நேரங்களில் நாம் கடவுளிடம் கூட அவன் இவன் எனப் பேசுவோம். இளையராஜா ஜீனியஸ்க்கு எல்லாம் ஜீனியஸ். மிஷ்கின் தவறான அர்த்தத்தில் கூறவில்லை. கெட்டவார்த்தை பேசியதற்கு நான் சப்போர்ட் செய்யவில்லை. ஆனால் இளையராஜா குறித்து அவர் பேசியதில் தவறு இல்லை.
அர்த்தமே வேறு: சில நேரங்களில் ஒருவர் பயங்கரமான ஒரு வேலையைச் செய்துவிட்டால், அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் என்னடா இப்படி பண்ணீட்டயேடா எனக் கூறுவோம் இல்லையா, அதுபோலத்தான் அன்றைக்கு மிஷ்கின் பேசினார். மிஷ்கின் அன்றைக்கு பயன்படுத்திய டா-வுக்கும், அவன் -க்கும் மரியாதைக் குறைவு என்று அர்த்தம் கிடையாது. அதற்கு அர்த்தமே வேறு" எனக் கூறினார். இவரது இந்த பதில் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் பலர் குரு சோமசுந்தரம் கூறுவது சரிதான் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











