தமிழ் சினிமாவுக்கே சாபக்கேடாக மாறிப்போனது ரசிகர்களா? திரைத்துறையா? சேர்ந்து கெட்டுப் போகுதா மாலிவுட்?
சென்னை: இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவுக்கென தனி மதிப்பும் கவனமும் உள்ளது என்றாலும், அது முன்பு போல உள்ளதா என்றால் அது கேள்விக்குறிதான். அதற்கு காரணம் மொத்த தமிழ் சினிமா துறையுமா இல்லை ரசிகர்களா என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக இந்த தொகுப்பில் கொஞ்சம் விரிவாக காணலாம்.
தமிழ் சினிமாவுக்கு சாபக்கேடாக மாறிப்போனது ரசிகர்களா அல்லது பெரும்பான்மையான திரைத்துறையா என்ற கேள்வி எழக் காரணமே, அண்மையில் தென்னிந்திய நடிகர் நானி தெரிவித்த கருத்து தான். அதாவது, அவர் கூறும் போது, " எனது படம் நன்றாக இருந்தாலும் இல்லை என்றாலும் என் மீது இருக்கும் அன்பினால், எனது தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள்தான் எனது படம் நன்றாக உள்ளதா இல்லையா? படத்தில் என்ன பிரச்னை, எது ஒர்க்-அவுட் ஆகியுள்ளது என்பது உள்ளிட்ட தெளிவான விமர்சனத்தை முன் வைத்து வருபவர்கள். எனவே எனது படம் வெளியாகும்போது நான் அதிகம் கவனிப்பது, தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் விமர்சனம் தான். ஆனால் சமீப காலமாக தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்களை போல மாறிவருகிறார்கள்" என்று வருத்தத்துடன் கூறினார்.
நடிகர் நானி தெரிவித்துள்ள இந்த கருத்தை மேலோட்டமாக அவரது கருத்து என்று மட்டும் பார்த்துவிட முடியாது. அவர் நிஜத்தை மிகவும் மென்மையாக சொல்லி இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமா சிக்கலில் உள்ளது. மலையாள சினிமாவும் சிக்கலை நோக்கி நகர்ந்து வருகிறது என்ற பதத்தில் புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

சிக்கல்: கமர்ஷியல் என்ற ஒற்றை கேட்டகரியின் கீழ் படத்தை ஹிட் ஆக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு சினிமா உலகம் இன்றைக்கு ஆளாகி நிற்கிறது. மேலும் ஒரு படத்தின் வெற்றி என்பது படத்தின் வசூலை மையமாக கொண்டு மாறிவிட்டது. இதை ஒப்புக் கொண்டாலும், இதில் உள்ள ஒரு சிக்கலாக பார்க்க வேண்டியது என்னவென்றால், ஒரு நடிகர் நடிக்கும் படம் அவருக்கு இணையாக உள்ள நடிகரின் படத்தை விட கூடுதலாக வசூலிப்பதுதான் வெற்றி என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.
மோசமான: இதனால் கமர்ஷியல் ஹிட்டுக்காக இரண்டு குத்து பாடல்கள், படம் முழுக்க வன்முறை, பின்னணியில் மாஸான இசை இவையெல்லாம்தான் ஒரு படத்தை வெற்றியடைய வைக்க முக்கிய காரணங்களாக மாறி நிற்கும் மோசமான கால கட்டத்தில் தமிழ் சினிமா இருக்கிறது. இந்த சூழல் கடந்த சில தாசாப்தங்களாக இருப்பதால், இந்த பதத்தை கொண்ட கமர்ஷியல் படங்கள்தான் அதிகம் வெளியாகின்றன. இந்த படங்களை ரசிகர்கள் அதிகம் ஹிட் ஆக்கிக் கொடுக்கிறார்கள்.
எது கமர்ஷியல்: தமிழ் சினிமாவில் வெளியாகின்ற பெரும்பான்மையான கமர்ஷியல் படங்கள், எதார்த்தத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. அதே நேரத்தில், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ப்ளூ ஸ்டார், லப்பர் பந்து, வாழை, குடும்பஸ்தன் போன்ற எதார்த்தமான மற்றும் உண்மைக்கு நெருக்கமான படங்களும் வெளியாகி ஹிட் அடிக்கின்றன. ஆனால் இது போன்ற படங்கள் எண்ணைக்கையில் மிகக் குறைவாகவே வெளியாகிறது. அதில் வெற்றிப் படங்களாக மாறுவதும் சொற்பமான படங்களே! கடந்த ஆண்டில் எதார்த்தமான கதைக்களத்தை கொண்ட மெய்யழகன், போகுமிடம் வெகு தூரமில்லை, நந்தன் போன்ற படங்களை, ரசிகர்கள் வெற்றிப் படங்களாக மாற்றத் தவறிவிட்டார்கள். தமிழ் ரசிகர்கள் செய்த இந்த தவறை தான், நடிகர் நானி சுட்டிக் காட்டியுள்ளார்.

வன்முறை: தனுஷ்ஷின் ராயன், அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் ரசிகர்களுக்கு டேக் - அவே என்று என்ன இருக்கிறது என்று கேட்டால் வன்முறை மட்டும் தான் இருக்கிறது தவிர, வேறு எதுவும் இல்லை என்று விமர்சிப்பவர்கள் உள்ளார்கள். இந்த விமர்சனம் அஜித்திற்கும் தனுஷ்க்கு மட்டும் இல்லாமல் இன்றைக்கு மாஸ் கதாநாயகர்களின் பெரும்பாலான படங்களுக்கும் பொருந்தும். கதைக்களத்திற்கு ஏற்ற திரைக்கதைதான் அமைக்க முடியும் என்று பதில் வந்தாலும், அவை தமிழ் திரையுலகையும் ரசிகர்களின் ரசனையையும் மிகவும் ஆபத்தான நிலைக்கு மாற்றிவிட்டது. அதன் விளைவுதான் விடாமுயறசி போன்ற படத்தில் அஜித் போன்ற மாஸ் நடிகர் வில்லன்களிடம் தொடர்ந்து அடிவாங்குவதை ரசிகர்களால் கூட பார்க்க முடியவில்லை என்ற புலம்பலுக்கு காரணம்.
மலையாள சினிமா: தமிழ் சினிமாவோடு சேர்ந்து மலையாள சினிமாவும் கெட்டுப் போகிறது என்ற அச்சம் உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதற்கு ஒரு உதாரணமாக மோகன்லாலின் எம்புரான் படத்தைக் கூட கூறலாம். எம்புரான் படத்தில் உண்மைச் சம்பவங்களை பிரதிபலிக்கின்ற காட்சிகள் இருந்தது பாராட்டத்தக்கது. ஆனால் மோகன்லால் படத்தில் மிகக் குறைந்த காட்சிகளே வந்தாலும், அவரது காட்சிகளுக்கு பின்னனி இசையை பார்க்கும் போது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்ட காட்சிகளாக உள்ளது.

அச்சம்: இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த படம் மலையாள சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படமாக மாறிவிட்டது. இந்த வெற்றிதான் மலையாள சினிமாவை ஆபத்தில் கொண்டு சென்று நிறுத்தும் ஆரம்பப் புள்ளியோ என்ற அச்சத்தை உருவாக்காமல் இல்லை. இப்போதுவரை கன்டென்டுக்கு பெயர் போன மலையாள சினிமா, இனி வரும் காலங்களில் வசூலை நோக்கி நகர்ந்து, மற்ற இந்திய திரையுலகங்களைப் போல, வசூல் வெற்றி தான் வெற்றி என்ற நிலைக்கு மாறிவிடுமா என்ற அச்சம் எழுகிறது.
உலக சினிமா: இன்றைக்கு உலக சினிமாக்கள் பார்த்து அவை குறித்து விவாதிக்கிற, கொண்டாடுகிற ரசிகர்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்கள் இன்றைக்கு சதவீதத்தில் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்கள் எதிர்காலத்தில் பெரும்பான்மையாக மாறும் போது, தமிழ் சினிமாவில் தரமான படங்களைக் கொடுக்கிற, எதார்த்தத்திற்கு நெருக்கமான படங்களை இயக்க இயக்குநர்கள் தயாராக இருந்தாலும், நடிகர்களும் தயாரிப்பாளர்களும் சொற்ப அளவுக்கு மாறிப்போவார்கள். இது தமிழ் சினிமாவை ஆபத்தான சூழலை காட்டிலும் மிகவும் அபத்தமான சூழலுக்கு கொண்டு சேர்த்துவிடும்.

தவளை புத்தி: சினிமாவை வெறுமனே பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கின்ற பார்வையுமே மிகவும் ஆபத்தானது தான். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு கிணற்றுத் தவளை புத்தி. இந்த பார்வை ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் திரை துறையினர் மத்தியிலும் இருப்பது தான் வருத்தமே. வெகுஜன மக்களின் ஊடகமாக இருக்கும் சினிமாவை பொழுதுபோக்கிற்காக மட்டும் இல்லாமல், சமூக அவலங்களுக்கு எதிராக ஊமையாக இருக்கும் மக்களை நோக்கி கல் எறியும் ஆயுதமாகவும் மாறி வருவது ஆறுதல் அளிக்கிறது. மெய்யழகன் படத்தின் காட்சிகளை வெட்டி எடுத்த சம்பவம், ரசனையைக் கடந்து, தன் வரலாறு தெரியாத அல்லது அதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லாத சமூகத்தின் அடையாளம்தான். தங்கலான் போன்ற வரலாற்றுத் தொன்மங்களை பேசுகிற படத்தை பா. ரஞ்சித் வெகுஜன மக்களுக்கு புரிகிற வகையிலும் எடுத்திருக்க வேண்டும். இந்த நிலையில் இருந்து திரைத்துறையும் மாற வேண்டும், ரசிகர்களும் மாறவேண்டும் அதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











