நடிகர் விக்ராந்தை பார்க்க திருமண வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்த மணப்பெண்
மும்பை: பாலிவுட் நடிகர் விக்ராந்தை பார்க்க மணப்பெண் ஒருவர் திருமண வீட்டில் இருந்து ஓடி வந்துள்ளார்.
மேக்னா குல்சார் இயக்கத்தில் தீபிகா படுகோனே ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ள படம் சாபக். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர் விக்ராந்த்.

விக்ராந்த் டெல்லியில் படப்பிடிப்பில் இருப்பது மணப்பெண் ஒருவருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் தாலி கட்டிக் கொள்ளாமல் விக்ராந்தை பார்க்க யாருக்கும் தெரியாமல் ஓட்டம் பிடித்துள்ளார்.
மணக்கோலத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த அந்த பெண் விக்ராந்தை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். விக்ராந்த் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் அவரை உடனே பார்க்க முடியாது என்று பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்ட அந்த பெண் ஒரு மணிநேரம் அழுது புரண்டு அமர்க்களப்படுத்திவிட்டார்.

இதையடுத்து விக்ராந்த் வந்து அந்த பெண்ணை சந்தித்து பேசி வீட்டிற்கு திரும்பிச் சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். அந்த பெண்ணோ நான் திரும்பிப் போக மாட்டேன் என்று கூறி அடம்பிடித்துள்ளார். அதன் பிறகு வேறு வழியில்லாமல் படக்குழுவினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அந்த பெண்ணால் படப்பிடிப்பு 4 மணிநேரம் பாதிக்கப்பட்டது. இது குறித்து விக்ராந்த் கூறியதாவது,
முதலில் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. ஒரு பெண் அதுவும் திருமணம் நடக்கும் நாள் அன்று தாலி கட்டிக் கொள்ளாமல் என்னை பார்க்க வந்ததை நினைத்தால் வியப்பாக உள்ளது. அவர் பத்திரமாக வீடு திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
என்னையும், என் நடிப்பையும் விரும்பி ரசிக்கும் மக்களுக்கு நான் என்றுமே நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால் சிலநேரம் ரசிகைகள் இப்படி செய்வது வினோதமாக உள்ளது என்றார்.
சாபக் படம் மூலம் தீபிகா படுகோனே தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்திற்காக தீபிகா கடுமையாக உழைத்துள்ளார். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் கதை தான் சாபக். படத்தில் தீபிகா ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் போன்று மாறியதை பார்த்த ரசிகர்கள் அசந்து போய்விட்டனர்.


Click it and Unblock the Notifications











