திரும்ப வரேனு சொல்லிட்டு போனாரே.. ஆர்.பி.சௌத்ரியை நினைத்து கலங்கும் பிரபலம்
சென்னை: நடிகர்கள் ஜீவா, ரமேஷ் ஆகியோரின் தந்தையும், தயாரிப்பாளருமான ஆர்.பி.சௌத்ரி நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். நீண்ட நாட்கள் உயிரோடு இருந்து சூப்பர் குட் பிலிம்ஸின் 100ஆவது படத்தை தயாரிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க; அவருக்கு இப்படி ஒரு முடிவு கிடைத்திருப்பது திரைத்துறையினர் அத்தனை பேருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரபல வசனகர்த்தா பிருந்தா சாரதி எமோஷனலாக கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர்.பி.சௌத்ரி. முதலில் சூப்பர் இன்டர்நேஷனல் என்ற பெயரில் படங்களை தயாரித்து வந்தார். அவருக்கும் குட் நைட் கொடு மேட் நிறுவனர் மோகனுக்கும் ஏற்பட்ட பழக்கம்; திரைத்துறையிலும் அவர்களை சேர்ந்து பயணிக்க வைத்தது. எனவே சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற நிறுவனமும் தொடங்கப்பட்டது. மலையாளத்தில் லயனம் உள்ளிட்ட படங்களை தயாரித்த அந்த நிறுவனம்; தமிழில் புது வசந்தம் என்ற படத்தை தயாரித்து அறிமுகமானது. அதில்தான் விக்ரமனும் இயக்குநராக அறிமுகமானார்.

முன்னணி தயாரிப்பாளர்: ஒருகட்டத்தில் இந்த நிறுவனத்தை அப்படியே சௌத்ரியிடம் ஒப்படைத்துவிட்டு மோகன் வெளியேற; சூப்பர் குட் பிலிமிஸின் ஒற்றை முகமான மாறினார் சௌத்ரி. தமிழில் முதல் படமான புது வசந்தம் ஹிட்டடித்ததை அடுத்து தொடர்ந்து அவர் தயாரித்த சேரன் பாண்டியன், சூர்யவம்சம், நாட்டாமை, பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் என பல மெகா ஹிட் படங்களை தயாரித்தார். பலரை இயக்குநராகவும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். சுருக்கமாக அவரை, 'கோடம்பாக்கத்து வேடந்தாங்கல்' என்று சொல்வார்கள்.
உயிரிழந்த சௌத்ரி: சூழல் இப்படி இருக்க நேற்று ராஜஸ்தான் மாநிலத்துக்கு ஒரு திருமணத்துக்கு சென்றிருந்தார். அப்போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு எந்த அடியும் இல்லையென்றாலும் அதிர்ச்சியில் மாரடைப்பு அவர் உயிரிழந்திருக்கிறார். இன்று அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறவிருக்கின்றன. ஒட்டுமொத்த திரைத்துறையினரும் ஆர்.பி.சௌத்ரியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் ஆனந்தம், பையா உள்ளிட்ட பல படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றிய பிருந்தா சாரதி எமோஷனலாக போஸ்ட் போட்டிருக்கிறார்.
பிருந்தாவின் பதிவு: அவர் தன் முகநூல் பக்கத்தில், "கடந்த வாரம் ஆர். பி. சௌத்ரி அவர்களைச் சந்தித்தேன். நீண்ட நேரம் பேசிவிட்டுத் திரும்பினேன். ராஜஸ்தான் போகிறவர் 8-ஆம் தேதி திரும்ப வருவதாக அலுவலகத்தில் சொன்னார்கள். 8-ஆம் தேதி காலை வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். கடைசி நாளில் கூட கதை பேசிவிட்டுதான் சென்றார். சிரித்த முகத்துடன் பார்த்த காட்சி மறையவில்லை இன்னும். இன்று இடி போல் இப்படி ஒரு செய்தி... சாலை விபத்தில் இறந்துவிட்டார் என்று. தமிழ் சினிமாவில் எத்தனையோ புதுமுக இயக்குநர்களை உருவாக்கினீர்கள்.
உங்கள் சாதனையை யாரும் செய்ததில்லை. நாளை உங்கள் உடலைத்தான் பார்க்கமுடியும். காலத்தைப் புரிந்து கொள்ள முடியாத மௌனத்தோடு அஞ்சலி செலுத்துகிறேன். போய் வாருங்கள் சார். கண்ணீரை அடக்க முடியவில்லை" என்று எமோஷனலாக குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த போஸ்ட் ரசிகர்களிடம் அதீத கவனத்தை பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications
