Varanasi Budget: வாரணாசி பட்ஜெட் இத்தனை கோடியா? தமிழ் சினிமாவுக்கு ஒரு வருஷத்துக்கே இவ்வளவு இல்லையேப்பா?
ஹைதராபாத்: இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌளி மற்றும் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் 'வாரணாசி' திரைப்படம், தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஒரு பான் இந்தியா படமாக உருவாகும் இந்த சாகச ஆக்ஷன் திரைப்படத்திற்கு, உலகளாவிய சாகச பின்னணி இருப்பதால், நாடு முழுவதும் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இப்படம் வெளியாக இன்னும் ஒரு வருடத்திற்கும் மேலாக இருந்தாலும், வர்த்தக வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் இதன் பட்ஜெட் பற்றிய விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது. ஹாலிவுட் ஊடகங்களின் தகவலின்படி, 'தொலைநோக்கு பார்வை கொண்ட' ராஜமௌளி இயக்கும் இந்தப் பிரம்மாண்டப் படம் சுமார் 150 மில்லியன் டாலர் (தோராயமாக ₹1361 கோடி) பட்ஜெட்டில் உருவாகி வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இது இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக செலவில் தயாரிக்கப்படும் படம் என்ற சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ராஜமௌளி, தனது முந்தைய படமான 'RRR'-ன் (சுமார் ₹600 கோடி) சாதனையை தானே முறியடித்துள்ளார். 'வாரணாசி' ₹600 கோடிக்கு இரு மடங்குக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்க, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய திரைக்குத் திரும்பும் பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். பிரபல நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்க, பிரகாஷ் ராஜ், மாதவன் போன்ற நட்சத்திர நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்க:. இப்படம் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படவுள்ளதாகத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக பட்ஜெட்: பிரம்மாண்டமான விஷுவல் எபெக்ட்ஸ், அசத்தலான ஆக்ஷன் காட்சிகள், மற்றும் நீண்ட படப்பிடிப்பு கால அட்டவணை ஆகியவை இதன் அதிக பட்ஜெட்டுக்கான முக்கிய காரணங்கள். மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா, கென்யா காடுகள் உட்பட ஏழு நாடுகள் மற்றும் அண்டார்டிகாவிலும் நடந்துள்ளது. அண்டார்டிகாவில் படமாக்கப்பட்ட அரிய இந்தியப் படங்களில் இதுவும் ஒன்றாக அமையவுள்ளது.
எகிறும் சம்பளம்: இந்த மிகப்பெரிய பட்ஜெட்டின் காரணமாக நடிகர்களின் ஊதியமும் அதிகரித்துள்ளது. ஆனால், இயக்குநர் ராஜமௌளி நேரடி ஊதியம் பெறவில்லை என்றும், அதற்குப் பதிலாக வெளிநாட்டுத் திரையரங்க உரிமைகளைப் பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த உரிமைகளின் மதிப்பு தோராயமாக ₹160 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. பட விளம்பரங்கள் பெரிய வெற்றியைப் பெற்றால் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் எனவும் வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வசூல் எதிர்பார்ப்பு: இந்த ஒப்பந்தம் வெற்றி பெற்றால், இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக ஊதியம் பெற்ற இயக்குனராக ராஜமௌளி திகழ வாய்ப்புள்ளது. மகேஷ் பாபுவின் வாழ்க்கைப் பயணத்திலேயே மிகப்பிரம்மாண்டமான திட்டமாக அமையும் இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











