வைட்டமின் குறைபாடு.. கெட்டுப்போன பன்.. பன் பட்டர் ஜாம் படத்தை கழுவி ஊத்திய பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 5ல் டைட்டில் வின்னரான ராஜு ஜெயமோகன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'பன் பட்டர் ஜாம்'. இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ராகவ் மிர்தாத் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகி உள்ள இப்படத்தில் ராஜு ஜெயமோகன், பவ்யா திரிகா, சார்லி சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்.
ஒரு நிகழ்ச்சியில் சரண்யா பொன்வண்ணனும் தேவதர்ஷினியும் சந்திக்கின்றனர், இருவரும் தங்களின் பசங்களை பற்றி பேசுகின்றனர். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துவிட, பசங்களை ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க வைத்து காதலிக்க வைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம். அவர்களை பொறுத்தவரையில், இது லவ் மேரேஜ், ஆனால், நமக்கு மட்டுமே இது அரேஞ்ச்ட் மேரேஜ் என தெரியும் என இரு அம்மாக்களும் திட்டம் போடுகின்றனர். இவர்களின் திட்டம், பிளான் ஒர்க்கவுட் ஆனதா? இல்லையா? ராஜு அம்மா திட்டம் போட்டு வைக்கும் பெண்ணை காதலிக்காமல், இன்னொரு பெண்ணை காதலிக்க என்ன ஆனது என்பது தான் 'பன் பட்டர் ஜாம்' படத்தின் கதை மீதிக்கதை.

சிறப்பான நடிப்பு: 'பன் பட்டர் ஜாம்' படத்தில் ஹீரோ ஹீரோயினைவிட சரண்யா பொன்வண்ணணும் தேவதர்ஷினி சிறப்பாக நடித்துள்ளனர். இது அம்மாவிற்கான திரைப்படம் என்று தான் சொல்ல வேண்டும், இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தில் ராஜு ஜெயமோகன் எப்போதும், சோகமான முகத்துடன் இருக்கிறார். எதற்காக அப்படி இருக்கிறார் என்று அவருக்கும் தெரியவில்லை, இயக்குநருக்கும் தெரியவில்லை, ஒரு வைட்டமின் குறைபாடு உள்ள ஹீரோவாக ராஜூ இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இருப்பது போல இருக்கிறார். அவருக்கு ஹீரோவிற்கான முதிர்ச்சி வரவில்லை. அவரின் நடிப்பு எந்த இடத்திலும் ஒர்க் அவுட் ஆகவில்லை. அவருக்கு இன்னும் நிறைய பயிற்சி தேவை.
கெட்டுப்போன பன்: இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட பெயருக்கு என்று நகைச்சுவை இல்லை. இந்த படத்தில் நகைச்சுவை கட்டாயம் சேர்க்கப்பட்டு, படத்தை நகைச்சுவையுடன் கொண்டு சென்று இருக்க வேண்டும். படத்தில் நகைச்சுவை வருவதற்கான அனைத்து அம்சமும் வாய்ப்பும் இருந்தும் படத்தின் இயக்குநர் குறட்டை விட்டு தூங்கி இருக்கிறார். சரண்யா பொன்வண்ணணும் தேவதர்ஷினியும் சிறப்பாக நடித்து இருக்கின்றனர். அவர்கள் வரும் ஒரு சில இடத்தில் மட்டும் சிரிப்பு வருகிறது. அவர்கள் இருவருமே திறமையானவர்கள் அப்படி இருக்கும் போதும், இவர்களை இயக்குநர் சரியான பயன்படுத்தவில்லை.
25 மதிப்பெண்: திரைக்கதையில் ஓட்டை, கதையில் ஓட்டை என படம் செம மொக்கையாக உள்ளது. மொத்தத்தில் 'பன் பட்டர் ஜாம்' திரைப்படம்.. " இரண்டு நாளைக்கு முந்தையே பன்.. கெட்டுப்போய் இருக்கிறது.. பட்டர் புளித்து போய்விட்டது, ஜாமில் இனிப்பே இல்லை. மொத்தத்தில், பன் பட்டர் ஜாம் படம் பலரை சோதித்துவிட்டது. படம் பார்த்த பலர் குறட்டை விட்டு தூங்கியதை பார்க்க முடிந்தது. வெளியில் அடிக்கும் வெயிலுக்கு நன்றாக தூங்க வேண்டும் என்றால், இந்த படத்தை பார்த்துவிட்டு நன்றாக தூங்கலாம். இந்த பன் பட்டர் ஜாம் படத்திற்கு பயில்வான் ரங்கநாதனின் மதிப்பெண் 100க்கும் 25 என படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











