நள்ளிரவில் நடிகையின் பிளாட்டில்.. தூக்கில் தொங்கிய தொழிலதிபர்.. சிக்கிய கடைசி நிமிட வாட்ஸ்அப் மெசேஜ்
பெங்களூரு: கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகையான கிரிஷி தபாண்டாவின் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தொழிலதிபர் வைஷாக் உபாத்யாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலைக்கான எந்தவொரு கடிதமும் அங்கிருந்து மீட்கப்படாத நிலையில், போலீசார் சந்தேகத்திற்கிடமான மரணம் எனப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஃபிளாட்டில் தங்கியிருந்த தொழிலதிபர்: போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, தொழிலதிபர் வைஷாக் உபாத்யாய்க்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த ஒரு மாதமாகவே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த வைஷாக், கடுமையான மன உளைச்சலிலும், மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால், நடிகை கிரிஷி தபாண்டாவிடம் அனுமதி பெற்று, அவர் இல்லாத நேரத்தில் கடந்த ஒரு வாரமாக அவரது பெங்களூரு அப்பார்ட்மெண்ட்டில் தான் வைஷாக் தங்கி உள்ளார்.

கோவிலுக்குப் போகலாம்: தொழிலதிபர் தற்கொலை செய்துகொள்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, நடிகை கிரிஷி தபாண்டாவின் மொபைல் எண்ணிற்கு வைஷாக் பல மெசேஜ்களை அனுப்பியுள்ளார். அதில், நான் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன். என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகை கிரிஷி, பதறியடித்துக் கொண்டு அவருக்குத் தொடர்ந்து ஃபோன் செய்து தயவுசெய்து எந்தவொரு தவறான முடிவையும் எடுக்காதீர்கள். நாம் இருவரும் சேர்ந்து பரிகாரத்திற்காகக் குக்கே சுப்ரமண்யா கோவிலுக்குச் சென்று வரலாம் என்று நடிகை கிரிஷி சமாதானம் செய்துள்ளார். அதன் பிறகு வைஷாக்கின் எண்ணைத் தொடர்பு கொள்ள முடியாததால், பயந்துபோன நடிகை உடனடியாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துவிட்டு, நள்ளிரவில் தனது ஃபிளாட்டிற்கு விரைந்து வந்துள்ளார். அங்கு கதவைத் திறந்து பார்த்தபோது வைஷாக் தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறியுள்ளார்.
6 கோடி ரூபாய் மிரட்டல் : மரணமடைந்த தொழிலதிபர் வைஷாக் உபாத்யாய், கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கறிஞர் மற்றும் தொழிலதிபரான அரவிந்த் ரெட்டி மிரட்டல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர். அரவிந்த் ரெட்டிக்கு மொட்டைக் கடிதாசி அனுப்பி, மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் 6 முதல் 7 கோடி ரூபாய் பணம் தர வேண்டும், தவறினால் கொன்றுவிடுவோம் என மிரட்டிய வழக்கில் போலீசார் வைஷாக்கை கைது செய்து பல நாட்கள் காவலில் எடுத்து விசாரித்திருந்தனர். அதன் பிறகு இந்த வழக்கிற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
நடிகையிடம் விசாரணை: இந்த வழக்குகளால் ஏற்பட்ட கெட்ட பெயர் மற்றும் குடும்பப் பிரச்சனைகள் தான் அவரது தற்கொலைக்குக் காரணம் என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும், வைஷாக்கிடமிருந்து நடிகை கிரிஷிக்கு வந்த வாட்ஸ்அப் மெசேஜ்களைப் போலீசார் பறிமுதல் செய்து, நடிகையிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவரது குடும்பத்தினர் யாரும் சந்தேகம் எழுப்பவில்லை என்றாலும், நடிகையின் வீட்டில் தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெங்களூரு வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications