பெங்களூரில் அஜித் பட நடிகையை திட்டி, அசிங்கமாக பேசிய கேப் டிரைவர்
பெங்களூர்: பிரபல பாடகியும், நடிகையுமான வசுந்தரா தாஸை பெங்களூரில் கேப் டிரைவர் ஒருவர் திட்டி, மோசமாக நடந்து கொண்டுள்ளார்.
பிரபல பாடிகியும், நடிகையுமான வசுந்தரா தாஸ் பெங்களூரில் வசித்து வருகிறார். அவர் தனது காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். பாஷ்யம் சர்க்கிள் அருகே ஒரு சிக்னலில் காரை நிறுத்தியுள்ளார்.
அந்த சிக்னலில் இருந்து அவர் நேராக செல்ல வேண்டும்.

கார்
சிக்னலில் வசுந்தராவின் இடது பக்கம் ஒரு கேப் நின்றுள்ளது. சிக்னலில் பச்சை விளக்கு எரிந்ததும் அந்த கேப் டிரைவர் தனது வாகனத்தை வலப்பக்கம் திருப்ப முயல வசுந்தரா தனது காரில் நேராக சென்றுள்ளார். இதனால் அந்த கேப் டிரைவரால் வலது பக்கம் திருப்ப முடியாமல் போனது. உடனே கேப் டிரைவருக்கு வசுந்தரா மீது கோபம் ஏற்பட்டுள்ளது.

சிக்னல்
வலது பக்கம் திருப்ப முடியாத கோபத்தில் அந்த கேப் டிரைவர் வசுந்தராவின் காரை பின் தொடர்ந்துள்ளார். அப்போது அவர் தொடர்ந்து ஹார்ன் அடித்துக் கொண்டே வசுந்தராவை பின் தொடர்ந்துள்ளார். மல்லேஸ்வரம் 18வது கிராஸ் ரோட்டில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால் இரண்டு வாகனங்களும் நின்றுள்ளது.

வசுந்தரா
சிக்னலில் தனது வாகனத்தை விட்டு இறங்கி வந்த அந்த டிரைவர் அனைவர் முன்பு வசுந்தராவை அசிங்கமாக திட்டியுள்ளார். வசுந்தராவை காரை விட்டு இறங்குமாறு கூறி கேவலமாக பேசியுள்ளார். வசுந்தரா சிக்னலில் பச்சை விளக்கு எரிந்ததும் காரை எடுத்துக் கொண்டு சென்றார். அப்படியும் விடாமல் அந்த நபர் வசுந்தராவை பின் தொடர்ந்துள்ளார்.

போலீஸ்
அந்த கேப் டிரைவர் வசுந்தராவை மீண்டும் ஒரு சிக்னலில் மடக்கி திட்டினார். அவர் அத்துமீறி நடப்பதை பார்த்த பிற டிரைவர்கள் அவரை தடுக்க வந்தனர். இதை பார்த்த அவர் அங்கிருந்து தனது கேபில் தப்பிவிட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











