Vijay - ஆமா அந்த கௌதம் மேனன் எப்படி.. விசாரித்த விஜய்.. யோஹன் படம் நின்றதற்கு இதான் காரணமாம்
சென்னை: Yohan Athiyayam Ondru (யோஹன் அத்தியாயம் ஒன்று) யோஹன் அத்தியாயம் ஒன்று படம் நின்றதற்கான காரணம் குறித்து ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தெரிவித்திருக்கிறார்.
கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் கௌதம் மேனன். மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் சூர்யாவை ஆக்ஷன் ஹீரோவாக காக்க காக்கவில் காட்சிப்படுத்தியிருந்தார். அதன் பிறகு கமலை வைத்து கௌதம் இயக்கிய வேட்டையாடு விளையாடு மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

யோகன் அத்தியாயம் ஒன்று: சூர்யா, கமல் ஹாசன், அஜித் உள்ளிட்டோருடன் பணியாற்றியிருக்கும் கௌதம் மேனன் விஜய்யுடன் இணைவதாக இருந்தது. அந்தப் படத்துக்கு யோகன் அத்தியாயம் ஒன்று என்று பெயரிடப்பட்டு அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. சர்வதேச தரத்தில் படம் இருக்கும் என விஜய் ரசிகர்கள் ரொம்பவே ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
நடிகர் கௌதம்: சமீபகாலமாக இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் கௌதம் மேனன் நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். அந்த வகையில் அவர் நடித்த லியோ படம் சமீபத்தில் வெளியானது. படத்தில் கௌதம் மேனனின் கேரக்டரும் நடிப்பும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அவர் எவ்வளவுதான் நடித்தாலும் மீண்டும் இயக்கத்திற்கு வர வேண்டும்; குறிப்பாக யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை மீண்டும் தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
மனோஜ் பரமஹம்சா பேட்டி: இந்நிலையில் யோஹன் அத்தியாயம் ஒன்று படம் நின்றுபோனதற்கு காரணம் குறித்து லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "நண்பன் திரைப்படத்தின் பாடல் படப்பிடிப்பின்போது வேறு லொக்கேஷனுக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது விஜய் என்னிடம் வந்து, ஏன் சார் கௌதம் மேனன் அப்படினு ஒருத்தர் இருக்காரே எப்படி சார் என கேட்டார்.
ரொம்ப நல்ல இயக்குநர்: நான் அதற்கு அவர் ரொம்பவே நல்ல இயக்குநர் சார். வித்தியாசமாக திரைக்கதை எழுதுவார். நமக்கு தேவையானது என்னவென்று தெரிந்துகொண்டு அதற்கேற்ப எடுப்பார் என்றேன். அதன் பிறகு ஒருமுறை விஜய் எனக்கு ஃபோன் செய்து கௌதம் மேனன் சொல்லும் கதை சூப்பரா இருக்கு சார். ஆனால் சுத்தமாக தமிழே இல்லை. மொத்தமும் ஆங்கிலத்தில் பேசுவது போல் இருக்கிறது. மைண்ட் வாய்ஸில் மட்டும்தான் தமிழ் இருக்கும். இது எனக்கு செட்டாகுமா என பயமாக இருக்கு என்றார்.

ஏன் இப்படி பண்ணிட்டீங்க: விஜய் பேசி முடித்ததும் கௌதம் மேனனுக்கு ஃபோன் செய்து என்ன கௌதம் இப்படி பண்ணிட்டீங்க என்றேன். அதற்கு அவரோ நானா ப்ளான் செய்யலை. எழுதிட்டேன் என சொன்னார். பிறகு அந்த படத்தின் போஸ்டர் ரிலீஸானது. ஆனால் படம் டேக் ஆஃப் ஆகாமலேயே நின்றுவிட்டது. இதுபோன்றுதான் துருவ நட்சத்திரம் கதையும் இருக்கும்.
கெட்ட வார்த்தை: அதேசமயம் அந்தப் படத்தில் நிறைய லோக்கல் வசனங்களும், கெட்ட வார்த்தைகளும் இடம்பெற்று சாதாரணமாக அமைந்திருக்கும். இப்படித்தான் விஜய் சாரும் கேட்டார். அந்தக் கதையில் இப்படி செய்திருக்கலாமே என்றேன். அதற்கு கௌதம் மேனனோ இதெல்லாம் தெரிந்து செய்றது இல்லை. அதுவாவே நடந்தது. என கூறினார். யோஹன் படம் மூன்று அத்தியாயங்களாக நடக்கக்கூடியது. ஸ்பை த்ரில்லர் ஜானரில் இருக்கும். அது அந்த சமயத்தில் நடந்திருந்தால் சரியாக இருந்திருக்கும். இப்போது அதே கூட்டணி உருவானாலும் படத்தை சரியாக கொண்டு போக முடியுமா என்பது சந்தேகமே" என்றார்.


Click it and Unblock the Notifications











