Captain Miller: "கர்ணனை விட பெரிய சம்பவம் ரெடி..” கேப்டன் மில்லர் விழாவில் மாரி செல்வராஜ் அதிரடி
சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தனுஷின் கர்ணன் படத்தை இயக்கியிருந்த மாரி செல்வராஜ், மீண்டும் அவருடன் இணைந்துள்ளார். அதுபற்றி ஏற்கனவே அப்டேட் வெளியான நிலையில், கேப்டன் மில்லர் விழாவில் மாரி செல்வராஜ் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கர்ணனை விட பெரிய சம்பவம் ரெடி
இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகிறது. தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் தரமான ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷுடன் சிவராஜ்குமார், ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் கேப்டன் மில்லர் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்துகொண்டார். தனுஷின் கர்ணன் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் மூலம் அறிமுகமான மாரி செல்வராஜ், இரண்டாவது படத்திலேயே தனுஷுடன் இணைந்தார். 2021ம் ஆண்டு வெளியன கர்ணன், தனுஷுக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
ஆடுகளம், அசுரன், வடசென்னை வரிசையில் கர்ணன் திரைப்படமும் தனுஷ் கேரியரில் ரசிகர்களின் ஃபேவரைட் மூவியாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில் நடித்த மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார் மாரி செல்வராஜ். கடந்தாண்டு வெளியான இந்தப் படமும் சூப்பர் ஹிட்டானது. மாமன்னன் உருவாகிக் கொண்டிருக்கும் போதே தனுஷுடன் மாரி செல்வராஜ் மீண்டும் இணைவதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால், இந்தப் படத்தின் மற்ற அப்டேட்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. மாமன்னை தொடர்ந்து வாழை படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இது கபடி வீரர் மணத்தி கணேசன் என்பவரின் பயோபிக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், தனுஷ் படத்தை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ்.
இதுபற்றி கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மாரி செல்வராஜ், கர்ணனை விட பெரிய சம்பவம் காத்திருக்கு. இந்தப் படத்திற்கான ஸ்க்ரிப்ட் எழுதுவதில் பிஸியாக இருக்கிறேன். அந்த வேலைகள் முடிந்ததும் உடனடியாக தனுஷ் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என மாரி செல்வராஜ் கூறினார். கர்ணனை விட பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம், தனுஷுக்கு இன்னொரு அசுரனாக இருக்கும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











