Captain Miller Shooting - குண்டு வெடிப்பு சர்ச்சை ஓவர் - மீண்டும் தொடங்கியது கேப்டன் மில்லர் படப்பிடிப்பு
சென்னை: Captain Miller Shooting (கேப்டன் மில்லர் ஷூட்டிங்) தென்காசியில் நடந்த கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்த சூழலில் இப்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷ் கடைசியாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்திருந்தார். பைலிங்குவலாக உருவாகியிருந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதேசமயம் அந்தப் படத்தை தனுஷ் மிகவும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் சுவாரஸ்யமற்ற திரைக்கதை, தமிழ் படமா இல்லை தெலுங்கு படமா என்று ரசிகர்களுக்கு எழுந்த குழப்பம் ஆகியவை அந்தப் படத்தை தோல்வி படமாக மாற்றியது.

கேப்டன் மில்லர்: இதனையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் தனுஷ். பீரியட் படமாக உருவாகும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. பிரியங்கா அருள் மோகன், ஜான் கொக்கேன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சாணிக்காயிதம், ராக்கி படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் இந்தப் படத்தை மிகச்சிறந்த படமாக கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர்.
தென்காசியில் ஷூட்டிங்: கேப்டன் மில்லரின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அந்தவகையில் தென்காசியில் கடந்த சில வாரங்களாக ஷூட்டிங் நடந்தது. இதில் தனுஷ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். படத்தின் முக்கியமான காட்சிகள் தென்காசியில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் நடந்துவந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தெரிகிறது.

ஷூட்டிங் நிறுத்தம்: இந்தச் சூழலில் கடுமையான வெயில் காரணமாக படக்குழுவில் சிலர் மயங்கி விழுந்துவிட்டதாகவும்,அதனால் ஷூட்டிங் நின்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் மலை அடிவாரத்திலும், களக்காடு முண்டந்துறை பகுதிகளிலும் ஷூட்டிங் நடத்துவதற்கு படக்குழு மாவட்ட நிர்வாகத்திடமோ, வனத்துறையிடமோ முறையான அனுமதி பெறவில்லை. அதுமட்டுமின்றி அந்தப் பகுதிகளில் குண்டு வெடிப்பு தொடர்பான காட்சிகளும் படமாக்கப்பட்டிருக்கின்றன.
ஷூட்டிங் நிறுத்தம்: குண்டு வெடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட பயங்கர சத்தம் அந்தப் பகுதியின் அருகில் வசிப்பவர்களை பெரும் அச்சம் அடைய செய்தது. மேலும் இதனால் நீர் வழி பாதைகள் பாதிக்கப்படுவதோடு வன விலங்குகளுக்கு சிக்கல் எழும் என்றும் கருதப்பட்டது. இதனையடுத்து படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டார். அதன்படி ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது.

மீண்டும் தொடக்கம்: இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் கேப்டன் மில்லர் படக்குழு முறையான அனுமதி பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்றிலிருந்து கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் இப்போது சென்னையில் இருக்கிறார். அவர் விரைவில் இந்த ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், வனத்தில் ஷூட்டிங் நடத்துவது எப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியே ஷூட்டிங் நடந்தாலும் வனத்தை அழிக்கும்படி படக்குழுவினர் நடந்துகொள்ளக்கூடாது. அந்த பொறுப்புணர்வுடன் அவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











