கேப்டன் மில்லருக்கு 2 தேசிய விருது.. லெகசியை கட்டிக்காக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்
சென்னை: 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் நடிகர் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் இரண்டு முக்கிய விருதுகளை வென்று கவனம் ஈர்த்துள்ளது. தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும், இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷுக்கு Special Mention விருதும் கிடைத்துள்ளது. இந்த வெற்றி, படக்குழுவுக்கு மட்டுமல்லாமல், தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸின் நீண்டகால திரைப்பயணத்திற்கும் மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் இருக்கக்கூடிய பாரம்பரியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சத்யஜோதி பிலிம்ஸ். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தரமான படங்களை தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ், ஏற்கனவே பல தேசிய விருதுகளை பெற்ற நிறுவனம். தற்போது 'கேப்டன் மில்லர்' மூலம் மீண்டும் தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது, அந்த நிறுவனத்தின் தரமான படைப்புகளுக்குக் கிடைத்த இன்னொரு பாராட்டாக திரை உலகில் பார்க்கப்படுகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படங்கள் தேசிய விருது பெறுவது என்பது இது முதல் முறையல்ல. கடந்த 1959-ம் ஆண்டு வெளியான 'கல்யாண பரிசு' திரைப்படம் தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. அதன் பிறகு 'ரிக்ஷாக்காரன்' படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். அதன் பின்னர் 'மூன்றாம் பிறை' திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்று, நடிகர் கமல்ஹாசனின் முதல் தேசிய விருதுக்கு காரணமான படத்தை தயாரித்ததே சத்யஜோதி பிலிம்ஸ் தான்.

அதன்பிறகும் சத்யஜோதி பிலிம்ஸ் தொடர்ந்து தரமான திரைப்படங்களை வழங்கி வருகிறது. அஜித் நடிப்பில் உருவான 'விஸ்வாசம்' திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்த நிலையில், தற்போது 'கேப்டன் மில்லர்' திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்று அந்த சாதனைப் பட்டியலில் தன்னையும் இணைத்து அலங்கரித்துள்ளது.
ஊக்கம்: இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான 'கேப்டன் மில்லர்' திரைப்படம் வெளியானபோது அதன் கதை, காட்சியமைப்பு மற்றும் தனுஷின் நடிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அதே படம் தேசிய அளவிலும் அங்கீகாரம் பெற்றிருப்பது படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்த்து: இந்த வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் தனுஷ் மற்றும் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. மேலும், Special Mention தேசிய விருதைப் பெற்ற தனுஷுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
நம்பிக்கை: ஏழு தசாப்தங்களாக தரமான கதைகளையும், ரசிகர்களின் மனதில் நிற்கும் திரைப்படங்களையும் தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ், தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்று. அப்படி இருக்கையில் சத்ய ஜோதி பிலிம்ஸ் இனியும் அதே தரத்தில் புதிய படைப்புகளை தயாரிக்கும் என்ற நம்பிக்கையை இந்த இரண்டு தேசிய விருதுகளும் மேலும் ஊக்கப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications

