அள்ளி அள்ளி கொடுத்த கேப்டன் விஜயகாந்த் 72வது பிறந்த நாள்.. கேப்டன் இல்லையே என ஏங்கும் ரசிகர்கள்!
சென்னை: கேப்டன் விஜயகாந்த் (Vijayakanth). தமிழ் சினிமா மட்டும் இல்லை தமிழ்நாடு அரசியல் தளத்திலும், அரசியலுக்கு அப்பார்ப்பட்ட பொதுத் தளத்திலும் தான் வாழ்ந்தவரை தாக்கத்தை ஏற்படுத்தியவர். சினிமா உலகில் கிங், அரசியல் தளத்தில் கிங் மேக்கர் என கேப்டன் தான் கால் பதித்த இடங்களில் எல்லாம், தனக்கான வரலாற்றை உருவாக்கியவர். இன்று அவருக்கு 72வது பிறந்த நாள் (Vijayakanth Birthday). அவரது பிறந்த நாளில் அவர் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கலாம்.
விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ். மதுரை மண்ணின் மைந்தனான இவர் கடந்த 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தார். இவரது குடும்பம் ரைஸ் மில் நடத்தி வந்ததால் சிறுவயதில் நல்ல வசதியாகவே வளர்ந்தார். 10ஆம் வகுப்பு வரை படித்த இவர். அதற்குமேல் படிக்க ஆர்வமில்லாமல் இருந்தார். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் சினிமா பார்த்து வந்த விஜயகாந்த் அதன் பின்னர் சினிமாவில் நடிக்க முடிவு செய்து சென்னைக்கு வந்தார். எம்.ஜி.ஆர் நடித்த எங்கள் வீட்டுப் பிள்ளை படத்தினை சுமார் 70 முறை பார்த்ததாக அவரே ஒரு சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்தபோது, இவருக்கு வாய்ய்பு அளிப்பதாக நம்பிக்கை கொடுத்தவர்களும் இறுதி நேரத்தில் 'சரியா வசனம் பேசத் தெரியவில்லை, கருப்பாவேற இருக்க’ போன்ற காரணங்களைக் கூறி நிராகரித்தனர். கதாநாயகனாக வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த இவருக்கு முதலில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இனிக்கும் இளமை படத்தில் இருந்து தனது சினிமா வாழ்க்கையை வில்லனாக தொடங்கியவர், அதன் பின்னர் பல வெள்ளி விழா படங்களுக்கு கதாநாயகனாக மாறினார். இனிக்கும் இளமை படத்தில்தான் இவரது பெயர் விஜயகாந்த் என மாற்றப்பட்டது.

கதாநாயகன்: தூரத்து இடி முழக்கம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த விஜயகாந்த். அதன் பின்னர் பலராலும் அறியப்பட்டார். தான் வாய்ப்பு தேடிச் சென்றபோது யாரெல்லாம் இவரை பல காரணங்களைக் கூறி நிராகரித்தார்களோ, அவர்கள் அனைவரும் விஜயகாந்த் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கும் தேடித் தேடிவந்து தங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுங்கள் என வரிசையில் நின்றனர். யாரையும் நிராகரிக்காமல், அனைவருக்கும் படங்கள் நடித்துக் கொடுத்தார் கேப்டன்.

சாப்பாடு: ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் வணிகத்தை அன்றைய காலகட்டத்தில் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கொண்டு சென்றார். கேரவனே இல்லாத காலகட்டம் அது, தனக்கான படப்பிடிப்பு முடிந்ததும், ஒருபோதும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியேறாமல் அங்கேயே இருந்து படப்பிடிப்பு பிரச்னை இல்லாமல் நடக்கின்றதா என்பதை கண்காணிப்பார். தமிழ் சினிமா வரலாற்றிலேயே, யாருமே செய்யாததை, செய்ய நினைக்காததைச் செய்தார் விஜயகாந்த். அதாவது சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது விஜயகாந்த் படத்தில்தான். அதன் பின்னர்தான் மற்றவர்கள் இதனை பின்பற்றத்தொடங்கினர். இதற்கான தனது சம்பளத்தில் இருந்து கணிசமான தொகையை தயாரிப்பாளருக்கு விட்டுக்கொடுத்தவர்.
நடிகர் சங்கத் தலைவர்: நடிகர் சங்கத் தலைவராக மாறி, நடிகர் சங்க கடனை அடைத்து, அதன் பத்திரத்தை மீட்டுக் கொண்டுவந்தவர் விஜயகாந்த். விஜயகாந்த் ஒரு முடிவு எடுக்கின்றார் என்றால், திரைத்துறையில் இருந்த அனைவரும் ரஜினி, கமல் உட்பட யாருமே மறுப்பு தெரிவிக்காமல் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு பொன்விழா எடுத்து அன்றைக்கு ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவிற்கு ஷாக் கொடுத்தவர்.

கிங் மேக்கர்: சினிமாத்துறையில் கிங்காக இருந்த விஜயகாந்த். தேமுதிக என்ற கட்சியை 2005ஆம் ஆண்டு தொடங்கி அரசியலில் களமிறங்கி கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமர முக்கிய காரணமாக இருந்தார். இது மட்டும் இல்லாமல், அதே தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் மாறினார். அடுத்த சில தேர்தலில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உருவெடுப்பார் என அவரது தொண்டர்கள் நினைத்துக் கொண்டு இருக்கும்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதன் பின்னர் அவர் களம் கண்ட 2016ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
கனத்த இதயம்: அதன் பின்னர் அவரால் அரசியலில் முன்புபோல் களமாடமுடியவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். இவரது மறைவு தமிழ்நாட்டையே சோகத்தில் மூழ்கடிக்கச் செய்தது. அவர் இல்லாமல் அவரது தொண்டர்களும் ரசிகர்களும் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால் அனைவரும் சற்றே கனத்த இயத்துடனே கொண்டாடி வருகின்றனர். நீங்கள் இல்லாத இந்த பிறந்த நாள் எங்களுக்குமே கனம்தான் கேப்டன்.


Click it and Unblock the Notifications











