மறைந்த பின்னரும் குறையாத கேப்டனின் மவுசு.. சினிமா தொடங்கி அரசியல் வரை.. கிங் மேக்கர் விஜயகாந்த்!
சென்னை: கேப்டன் விஜயகாந்த்.. இந்த வார்த்தையைச் ஏதோ ஏனோ தானோ என்று சொல்லிவிட முடியாது. அது என்றைக்கும் கம்பீரத்தோடு உச்சரிக்கப்பட வேண்டிய சொல். கம்பீரத்துக்கு எடுத்துக்காட்டாக, தாய்மைக்கு எடுத்துக்காட்டாக, வீரத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த மனிதனை அடையாளப்படுத்தும் சொல்லை கம்பீரத்துடனும் அன்புடனும் உச்சரிப்பது என்பது, அவருக்கு செய்யும் மரியாதை. கேப்டன் மறைந்த பின்னர் கொண்டாடப்படும் இரண்டாவது பிறந்தநாள் இன்று. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்வார்கள் அல்லவா, அதற்கு கொஞ்சமும் பிசுரு இல்லாமல் பொருந்திப் போகிறது, சமகால அரசியல் சூழலும் சினிமா சூழலும்.
சினிமாவில் கோலோச்சிய கேப்டன், அங்கிருந்து அப்படியே அரசியலில் காலடி எடுத்து வைத்தார். சினிமாவில் அவருக்கு எந்த அளவுக்கு மவுசு இருந்ததோ அதே அளவுக்கு அரசியலிலும் இருந்தது. இரண்டு பெரிய கட்சிகளான திமுக, அதிமுக மீது இருந்த அதிருப்தி ஓட்டுகள் தொடங்கி, தனது ரசிகர்களின் வாக்குகளை பெற்று, முதல் தேர்தலிலேயே தானும் ஒரு ஆள் தான் என்று நிரூபித்தார்.

இரண்டாவது தேர்தலில் அவர் அதிமுகவுடன் வைத்துக் கொண்ட கூட்டணி என்பது, ஆட்சியில் இருந்த திமுகவை படுதோல்வியில் தள்ளியது. 2011இல் அதிமுக ஆட்சியில் அமர, எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்தார். கட்சி தொடங்கி இரண்டாவது தேர்தலிலேயே எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை எட்டினார். அந்த தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி, விஜயகாந்த்தை தனது கூட்டணியில் சேர்க்க சில முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் கேப்டன் கொஞ்சமும் கரையவில்லை. திமுக வீட்டுக்கு அனுப்பட்டது.
பொட்டு வெச்ச தங்க குடம்: கேப்டன் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் கொண்டாடப்படும் இரண்டாவது பிறந்தநாள். கேப்டன் மறைந்தாலும் அவர் இன்றைக்கும் தமிழ்நாடு அரசியல் மற்றும் திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். லப்பர் பந்து படத்தில் இடம்பெற்ற விஜயகாந்த் ரசிகர் கதாபாத்திரமும், பொட்டு வெச்ச தங்க குடம் என்ற விஜயகாந்த் பாடலும், படத்தை வெகுஜன மக்களிடத்தில் கொண்டு செல்ல உதவியாக இருந்தது. அது மட்டும் இல்லாமல், கேப்டனின் பாட்டை நியாயப்படுத்தும் காட்சிகள் படத்திற்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்த காரணங்களில் மிக முக்கியமான காரணமாக மாறியது.

விஜய் - விஜயகாந்த்: கேப்டன் மறைவுக்குப் பின்னர் நடிகர் விஜய், கேப்டன் விஜய்காந்தை அதிகம் பயன்படுத்துகிறார், நினைவு கூர்கிறார் என்று கூறலாம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படமான தி கோட் படத்தில் கேப்டனின் ஏ.ஐ. காட்சி இடம்பெற்றது. அதுவும், கேப்டன் முகமூடியை கழட்டினால் விஜய் தோன்றுவதைப் போல காட்சி வைக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் விஜய் நடத்திய தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டில் கேப்டன் விஜயகாந்த் குறித்து பேசினார். மதுரையில் மாநாடு நடைபெற்றதால் கேப்டன் குறித்து சிலாகித்து பேசினார். இதனால் அவர் தேமுதிகவின் வாக்குகளைக் கவர நினைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
Miss You Captain : சினிமாவில் கேப்டனின் பிரசன்ஸ் இருக்கிறது என்றாலே படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி ஆர்வம் ஏற்பட்டு விடுகிறது. ரி ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் படத்தையே, கண்ணீருடன் பார்த்த ரசிகர்களை சில தினங்களுக்கு முன்னர் பார்த்தோம். சினிமா அரசியல் என இரண்டிலும் தான் மறைந்த பின்னரும் கேப்டன் விஜயகாந்த் கிங் மேக்கராக உள்ளார் என்பதன் சான்று தான் அது. தமிழ்நாடே உங்களை கொண்டாடினாலும் நீங்கள் இல்லாத குறையை யாராலும் நிரப்ப முடியாது கேப்டன். We Really Miss You Captain!


Click it and Unblock the Notifications











