9வது வள்ளல்.. 1 கோடி கொடுத்தாலும் விளம்பரத்துக்கு நோ சொன்ன விஜயகாந்த்.. ஏன் தெரியுமா?
சென்னை: விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்று வருகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மக்கள் வெள்ளத்தில் மிதந்துக் கொண்டு தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்படுகிறது.
சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறி வந்த காலக்கட்டத்தில் விளம்பரத்தில் நடிக்க விஜயகாந்துக்கு வாய்ப்பு வந்த நிலையில், மக்களுக்கு தீங்கான விஷயம் என விஜயகாந்த் மறுத்துள்ளது அவரது மக்கள் நலனை காட்டுகிறது.

18 படங்கள்: இனிக்கும் இளமை திரைப்படம் 1979ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் தான் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் விஜயகாந்த். அந்த படத்தை தொடர்ந்து எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் பல படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். 1984ஆம் ஆண்டு மட்டும் விஜயகாந்த் 18 படங்களில் அல்லும் பகலும் ஓய்வெடுக்காமல் நடித்து ஒட்டுமொத்த திரையுலகத்தையே வியக்க வைத்திருந்தார் விஜயகாந்த்.
விளம்பரத்தில் நடிக்கவில்லை: பிரபல குளிர்பான நிறுவனம் பல முன்னணி நடிகர்களை தங்கள் விளம்பரத்தில் நடிக்க வைத்து வந்த நிலையில், நடிகர் விஜயகாந்த் விளம்பரத்தில் நடிக்க 1 கோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்தும் அந்த குளிர்பானத்தால் மக்கள் நலன் கெடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருதிய விஜயகாந்த் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என மறுத்து விட்டாராம்.
9வது வள்ளல்:கடையெழு வள்ளல்கள் என அந்த காலத்தில் இருந்த மன்னர்கள் குறித்து சொல்லப்பட்டு வந்த நிலையில், 8வது வள்ளல் என எம்ஜிஆரை மக்கள் பாராட்டினர். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான விஜயகாந்த் அவரை போலவே தன்னை நாடி வருபவர்களின் பசியை போக்கி அவர்களின் கஷ்டத்தை போக்கி வந்தவர் விஜயகாந்த். விஜயகாந்தை 9வது வள்ளல் என சூப்பர் சுப்புராயன் பேசும் போது புகழ்ந்து பேசி அஞ்சலி செலுத்தினார்.
மக்கள் வெள்ளம்: எம்ஜிஆருக்கு வந்ததை போல கருப்பு எம்ஜிஆரான கேப்டன் விஜயகாந்தை கடைசியாக காண மக்கள் வெள்ளம் போல தீவுத்திடல் முதல் கோயம்பேடு வரை கூடியுள்ளனர். கேப்டன் விஜயகாந்துக்கு வீர வணக்கம் என கோஷம் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











