தாறுமாறாக ஓடிய கார்.. இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து.. சிக்கிய சினேகன்.. பாய்ந்தது வழக்கு!
சென்னை: தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சினேகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கவிஞர், நடிகர், பிக் பாஸ் பிரபலம், மநீம இளைஞரணி செயலாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் சினேகன்.
கொசப்பட்டி அருகே 28 வயது இளைஞர் மீது சினேகன் ஓட்டி வந்த கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

கட்டிப்பிடி வைத்தியர்
கவிஞராக ஏகப்பட்ட பாடல்களை எழுதி பிரபலமான சினேகன், நடிகர் அவதாரம் எடுத்தார். அதன் தொடர்ச்சியாக, பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில், பெண் போட்டியாளர்களை அதிகளவில் கட்டிப் பிடித்து கட்டிப்பிடி வைத்தியர் என்ற பெயரை எடுத்தார்.

கமல் கட்சியில் பொறுப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சினேகன், நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அந்த கட்சியில் அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. மநீம சார்பாக கடந்த ஆண்டு தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

கார் மோதி விபத்து
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சாவேரியார்புரத்தில் தாறுமாறாக கார் ஓட்டி வந்த சினேகன் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அருண் பாண்டி என்பவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

28 வயசு இளைஞர்
திருமயம் வட்டம் ஊனையூர் அருகே உள்ள ஆலமரத்துக் குடியிருப்பைச் சேர்ந்த அருண் பாண்டி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது சினேகன் ஓட்டி வந்த கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது. ஆறுமுகம் என்பவரின் மகனான அருண் பாண்டிக்கு 28 வயதே ஆவது குறிப்பிடத்தக்கது.

சிக்கிய சினேகன்
திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அருண் பாண்டி சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து ஏற்படுத்தி விட்டு, அங்கிருந்து எஸ்கேப் ஆக சினேகன் முயற்சி செய்ததாகவும், பின்னர், திருமயம் போலீசார், அவர் மீது விபத்து ஏற்படுத்தியது மற்றும் கவனக் குறைவாக வாகனம் ஓட்டிய பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











