'ஆரம்பம்' படத்திற்கு தடை கோரி வழக்கு: படம் நாளை ரிலீஸ் ஆகுமா?
சென்னை: அஜீத்தின் ஆரம்பம் படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படம் நாளை ரிலீஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில் ஆரம்பம் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சேலம் ரெட்டியூரைச் சேர்ந்த பிளாக் கிங்டம் பிக்சர்ஸ் சார்பில் கே. கண்ணன் நகர சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
'இனி தான் ஆரம்பம்' என்ற தலைப்பில் தமிழ் திரைப்படத்தை தயாரித்து இயக்கி வருகிறேன். இப்படத்தின் பாடல் பதிவும் நடந்துவிட்டது.
இந்த பெயரை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி பதிவு செய்தேன். படத்தின் தயாரிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில் ஸ்ரீசாய் மூவிஸ் சார்பில் ரகுராம் என்பவர் 'ஆரம்பம்' என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து வெளியிடவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே, நான் பதிவு செய்த பெயரை, விதிகளுக்கு முரணாக தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்த 'ஆரம்பம்' என்ற பெயரை திரும்பப் பெறுமாறு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications












