கத்தி கழுத்துக்கு மீண்டும் ஒரு கத்தி… ரிலீஸ் ஆவதில் சிக்கல்
சென்னை: கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று மீஞ்சூர் கோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளாராம். இதனால் கத்தி திரைப்படத்தின் கழுத்துக்கு தற்போது புதிய கத்தி ஒன்று முளைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கத்தி திரைப்படம் எந்த நேரத்தில் பூஜை போடப்பட்டதோ அன்றிலிருந்தே சிக்கல்தான். படத்தின் போஸ்டர் வெளியானபோதே அது காப்பி என்று கழுவி ஊற்றினார்கள். இப்போது வேறொருவரின் கதையை சுட்டுவிட்டார்கள் என்று சர்ச்சை எழுந்துள்ளது.
'கத்தி' திரைப்படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம் ராஜபக்ஷேயின் பினாமி நிறுவனம் என்பதும், அதையொட்டி அந்தத் திரைப்படத்துக்கு எதிராக 60-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் கொதித்து எழுந்தன. இந்த சர்ச்சை சற்றே ஓய்ந்துள்ள நிலையில் 'கத்தி திரைப்படத்தின் கதையே என்னுடையது' என்று மீஞ்சூர் கோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த கோபியின் தரப்பில் ஆஜராவது மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்புவாம். அந்த வழக்கு, இயக்குநர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிர்வாகி ஜெகன் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தரப்புக்கு வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி வாதாடுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூத்தகுடி கதை
''கோபி தாக்கல் செய்துள்ள மனுவில், 'சில வருடங்களுக்கு முன்பு, தன் ஊரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று தன் நிறுவனத்தைத் தொடங்க அப்பாவி மக்களிடம் இருந்து நிலத்தை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியது. அப்போது ஏற்பட்ட பாதிப்புகளை வைத்து 'மூத்த குடி' என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதினேன்.

சினிமாவிற்கு போன கதை
அந்தக் கதையை தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரிடம் சொன்னேன். அப்போது ஜெகன் என்பவரும் எங்களுடன் இருந்தார். மூன்று மணி நேரம் அந்தக் கதையை சொல்லி முடித்ததும், இப்போது என்னால் இந்தக் கதையை திரைப்படமாகத் தயாரிக்க முடியாது என்று விஸ்வாஸ் சுந்தர் சொல்லிவிட்டார்.

முருகதாஸ் சம்மதம்
அப்போது அவருடன் இருந்த ஜெகன், இந்தக் கதை அற்புதமாக உள்ளது என்றும் இதைத் திரைப்படமாக தயாரிக்க இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் முருகதாஸிடம் சொல்லி ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார். சொன்னபடியே என்னை இயக்குநர் முருகதாஸிடம் அழைத்துச் சென்றார். கதையைக் கேட்டு என்னைப் பாராட்டிய முருகதாஸ், சில திருத்தங்களையும் சொல்லி, கதையை இரண்டு ஹீரோ சப்ஜெக்டாக மாற்றவும் சொன்னார். அதன்பின், என்னை இயக்குநராக வைத்து படத்தை தயாரிக்கவும் முருகதாஸ் சம்மதித்தார்.

ஒதுங்கிய முருகதாஸ்
அதன்படி கதையை மேம்படுத்தும் வேலைகள் மட்டும் ஒன்றரை வருடங்களாக நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு திடீரென அந்த வேலையை நிறுத்திவிட்டு, தன்னால் இந்தத் திரைப்படத்தை இப்போது தயாரிக்க முடியாது என்று சொல்லி முருகதாஸ் ஒதுங்கிக்கொண்டார்.

கத்தி பட அறிவிப்பு
அதன் பிறகு திடீரென நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் 'கத்தி' திரைப்படத்தை முருகதாஸ் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அதுபற்றி நான் சினிமா ஆட்களிடம் விசாரித்தபோது, 'கத்தி' திரைப்படத்தின் கதை, நான் சொன்ன 'மூத்த குடி' கதைதான் என்று எனக்குத் தெரியவந்தது.

நிவாரணம் கேட்ட கோபி
எனவே, நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, நம்பிக்கை மோசடி செய்த இயக்குநர் முருகதாஸ் மற்றும் ஜெகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், 'கத்தி' திரைப்படம் வெளியாகும் முன், தனக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்' என்று சொல்லியிருக்கிறாராம்!''

வழக்கறிஞர் நியமனம்
''இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் சங்கரை அட்வகேட் கமிஷனராக நீதிமன்றம் நியமித்தது. அவர்முன் கோபியும் முருகதாஸும் தங்கள் கதையின் நகலைக் கொடுக்க வேண்டும் என்றும், இரண்டும் ஒரே கதைகளா என்பதை அவர் முடிவுசெய்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

நகல் கொடுத்த கோபி
கோபி தன் கதையின் நகலைக் கொடுத்துவிட்டார். ஆனால், முருகதாஸ் தரப்பு கதையின் நகலைக் கொடுக்கவில்லை. மாறாக, 'அட்வகேட் கமிஷனரை நீதிமன்றம் நியமித்ததை ரத்துசெய்ய வேண்டும். இதுவரை கோபியை முருகதாஸ் சந்தித்ததே இல்லை. அவரிடம் எந்தக் கதையும் கேட்கவில்லை' என்று பதில்மனு தாக்கல் செய்துள்ளனர்.''

படத்திற்கு சிக்கலாகும்
கதையின் நகலை தாக்கல் செய்தால், 'வழக்கு விவகாரமும் கதையில் உள்ள முக்கியமான அம்சங்களும் வெளியில் கசிந்துவிடும். அதனால், 'கத்தி' திரைப்படத்தின் வியாபாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்' என்று அவர்கள் காரணம் சொல்கின்றனர்.

ரிலீஸ் ஆவதில் சிக்கல்
லைக்கா விவகாரம் என்பது அரசியல்ரீதியானது. ஆனால், கதை என்னுடையது என்று கோபி கிளப்பும் விவகாரம், நீதிமன்றத்துக்கு போய்விட்டது. அதில் இருந்து மீண்டு வருவதற்குள், 'கத்தி' ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் என்கின்றனர் கோடம்பாக்கம் வட்டாரத்தில். எது எப்படியோ... கத்தி.... கத்தி.... ஒரு வழியாக கத்தி ரிலீஸ் ஆனா சரிதான்.


Click it and Unblock the Notifications











