கொரோனா விதிமுறைகளை மீறி நீர்வீழ்ச்சிக்குச் செல்வதா? பிரபல ஹீரோ மீது பரபரப்பு புகார்!
ஐதராபாத்: கொரோனா விதிமுறைகளை மீறி நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்றதால் நடிகர் அல்லு அர்ஜுன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் சூப்பர் ஹிட்டுக்கு பிறகு அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படம், புஷ்பா.
சுகுமார் இயக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

வித்தியாசமான கெட்டப்
பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் தாடி மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில், இருக்கிறார், அல்லு அர்ஜூன். இந்த போஸ்டர், வெளியானபோதே பரபரப்பானது.

விஜய் சேதுபதி
இந்த போஸ்டர் அதிகமான லைக்ஸ்களை பெற்று, ட்விட்டரில் சாதனை படைத்தது. இந்தப் படம் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, வன அதிகாரியாக நடிக்கிறார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

படப்பிடிப்புக்கு அனுமதி
பின்னர் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகி விட்டார். இதற்கிடையே கொரோனா வைரஸ் காரணமாக புதிய படங்களுக்கான ஷூட்டிங் தடைபட்டிருந்தது. 6 மாத காலத்துக்குப் பிறகு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் ஷூட்டிங்கை நடத்த பல இயக்குனர்கள் முயன்று வருகின்றனர்.

குண்டலா நீர்வீழ்ச்சி
இந்நிலையில், ‘புஷ்பா'படப்பிடிப்புக்கான இடத்தைப் பார்க்க, படக்குழுவினர் சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் குண்டலா நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்றனர். கொரோனா காரணமாக இந்த பகுதிக்குச் செல்ல அரசு தடை விதித்திருந்தது. இதில் நடிகர் அல்லு அர்ஜுனும் கலந்து கொண்டார். இதுபற்றிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது.

நடவடிக்கை
கொரோனா விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு நடத்தச் சென்றதால் இந்த படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், அதிலாபாத் நெரடிகுண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி, அதன் பின்னர் வழக்கு பதிவு செய்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











