சிம்புவின் இங்க என்ன சொல்லுது.... பணமோசடி வழக்கில் சிக்கி நிக்குது!
சென்னை: சிம்பு நடிப்பில் வெளிவரவிருக்கும் இங்க என்ன சொல்லுது படத்துக்கு தடை கோரி வடபழனியைச் சேர்ந்த பைனான்சியர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வடபழனியை சேர்ந்தவர் ரமேஷ். இவர், சென்னை உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "சென்னை நந்தனத்தை சேர்ந்த நீலகண்டன் என்ற கணேஷ் என்னிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். இந்த தொகையை காசோலை மூலம் திருப்பிக் கொடுத்தார். அந்த காசோலையில், வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லை என்று திரும்பி வந்தது.
இதுகுறித்து நீலகண்டனிடம் கேட்டபோது, வழக்கு எதுவும் தொடர வேண்டாம். பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று கூறினார். இந்த நிலையில், எனக்கு பணம் தராமல், நடிகர்கள் சிம்பு, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'இங்க என்ன சொல்லுது' என்ற படம் நீலகண்டன் தயாரித்துள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. எனவே எனக்கு தரவேண்டிய பணத்தை கொடுக்காமல், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்''என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனு குறித்து படத் தயாரிப்பாளர் நீலகண்டன் 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்புவதற்கு உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications












