‘காப்பான்’ படத்தின் கதை என்னுடையது.. சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு!
சென்னை: சூர்யா நடித்துள்ள 'காப்பான்' படத்துக்கு இடைக்கால தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஜான் சார்லஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் கதைகளை எழுதியுள்ளதாகவும், கடந்த 2014-2016-ம் ஆண்டுகளில் 'சரவெடி' என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியதாகவும் அதில், பத்திரிகை நிருபரான கதாநாயகன், இந்திய பிரதமரிடம் பேட்டி காணும்போது, விவசாயம், நதி நீர் இணைப்பு மற்றும் நதி நீர் பொது பங்கீடு ஆகியவற்றின் நன்மை குறித்து எடுத்துரைப்பார்.

இந்த கதையை பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்திடம் விரிவாக கூறினேன். அவர் கதையை நன்றாக உள்வாங்கிக் கொண்டார். எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன்.
இந்த நிலையில், என்னுடைய சரவெடி கதையை காப்பான் என்ற பெயரில் கே.பி.ஆனந்த் படமாக்கியுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அதில் நதிநீர் இணைப்பு மற்றும் பங்கீட்டு குறித்தும், விவசாயம் குறித்தும் பிரதமருக்கு பத்திரிகையாளராக நடித்துள்ள ஹீரோ விளக்கம் அளிக்கிறார். என்னுடைய கதையை தலைப்பை மாற்றி எடுத்துள்ள இந்த காப்பான் படத்தை இம்மாதம் இறுதி நாளில் வெளியிட உள்ளனர்.
எனவே, காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். வழக்கு நீதிபதி கிருஷ்ணன்ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பட நிறுவனம் தரப்பில் இடைக்கால தடை விதிக்க கூடாது என்று வாதிட்டனர். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற செப்டம்பர் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











