தமிழ் சினிமாவில் தலைதூக்கும் சாதி!
சாதி, மத பேதமில்லாமல் எல்லோரும் சமத்துவமாக வரும் ஒரே இடம் தியேட்டர் தான். பொழுதுபோக்கு தான் எல்லோரையும் ஒன்றிணைக்கிறது. ஆனால் அந்த சினிமாவிலேயே சாதியை வளர்க்க நினைக்கும் சில பிறவிகளை என்ன செய்யலாம்?
கடந்த ஆண்டு சேதுபூமி என்றொரு படம் வந்தது. இதில் தென் தமிழ் நாட்டில் வாழும் பெரும்பான்மை கொண்ட ஒரு சாதியை தூக்கோ தூக்கென்று தூக்கிப் பிடித்திருந்தார்கள். படம் ரிலீஸான பிறகு படத்தின் இயக்குநரே தன் 'குரூப்'களுக்கு நேரடியாக வாட்ஸ் அப்பில் ஒரு வேண்டுகோள் வைத்தார். அதில் 'நம் சாதி பெருமையை பேசுவதற்காக தான் இந்த படத்தையே எடுத்தேன்' என்று பெருமை வேறு. தொடர்ந்து சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுப்பவர் வரிசையில் கொம்பனான இயக்குநரும் இடம் பிடித்திருக்கிறார்.

அடுத்தது நவரச நாயகன் தன் மகனுடன் நடிக்கும் படத்தின் பெயரே ஒரு பெரும் தலைவரின் பெயர். ஆனால் அவரை இப்போது ஒரு குறிப்பிட்ட சாதியினர் தான் அதிகம் சொந்தம் கொண்டாடுகின்றனர். நடிக்கும் நடிகரும் அதே சாதி வேறு. இந்த படம் அடுத்த வாரம் ரிலீஸாகவிருக்கிறது.
திலக வாரிசு ஹீரோவுக்காக கதை கேட்பது அவரது குடும்பம்தான். வரும் இயக்குநரின் சாதியை வைத்தே அவருக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறதாம்.
ஒரு நிகழ்ச்சியில் குஷ்பு 'எங்களுக்குள் சாதியே இல்லை' என்று பெருமிதப்பட அடுத்து மைக் பிடித்த சிங்கப்பூர்வாசி வடிவழகன், "குஷ்பு மேடம் சொன்னாங்க,தமிழ் சினிமாவில் சாதி இல்லைனு. உண்மையிலேயே எங்களுக்கெல்லாம் சாதி என்றால் என்னானு தெரியாது. ஆனால், தமிழ்ச் சமூகத்தில் எத்தனை சாதிகள் இருக்கிறது என்பதை நாங்கள் தமிழ் சினிமாவைப் பார்த்துதான் தெரிந்துகொண்டோம்," என்று சொல்லி முடிக்கக் கரகோஷம் அரங்கக் கூரையைப் பிளந்தது. அப்போது மேடையில் இருந்த இயக்குநர் இமயத்தின் முகத்தில் ஈயாடவில்லை.
ஆனால் அவர் சொன்னதுதான் உண்மை என்பதை சினிமாக்காரர்கள் உணர்வார்களா?
-ஆர்ஜி


Click it and Unblock the Notifications