காவிரி பிரச்னையின் இன்றைய நிலையை அன்றே சொன்ன தங்கர் பச்சான் - பார்த்திபன்!
சென்னை : காவிரி விவகாரம் தற்போது மீண்டும் உச்சம் பெற்றிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் எனும் உச்சநீதிமன்ற உத்தரவு மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுகளால் 'காவிரி மேற்பார்வைக்குழு' எனத் திரிக்கப்பட்டது தமிழக விவசாயிகளை கொதிக்கவைத்துள்ளது.
தற்போது தமிழகம் முழுக்க விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டங்களை வலுப்படுத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் இறங்கி வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக, 2004-ல் தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன் நடித்து வெளியான 'தென்றல்' படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி இன்றைய நிலைமையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
தற்போது நடைபெற்று வருவதை பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே தங்கர் பச்சான் தனது படத்தில் காட்சியாக வைத்திருப்பதாக ஆச்சரியத்துடன் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
'தென்றல்' படத்தின் காட்சியில், ஜனாதிபதி விருது பெறுவதற்காகச் செல்லும் எழுத்தாளர் பார்த்திபன், விருதை மறுத்து தமிழர்களின் உரிமையான காவிரிக்காக பேசுவார். காவிரியை மையமாக வைத்து எதிர்காலத்தில் தமிழ்நட்டில் உணர்வுப் பூர்வமான போராட்டங்கள் வெடிக்கும் எனக் கூறியிருப்பார்.
அதன்படியே தான், தற்போது காவிரிக்காக குரல் கொடுத்து வருகிறார்கள் தமிழர்கள். ஸ்டெர்லைட், நியூட்ரினோ என மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என வலியுறுத்தி #WeWantCMB ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











